அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஊழியர்களுக்கு ஒருமுறை ஒரு தொகையை வழங்குவது குறித்து முதலாளிகள் வரும் ஆண்டில் பரிசீலிக்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய சம்பள மன்றம் ஆண்டுதோறும் கூடி சம்பள வழிகாட்டி முறையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் செவ்வாய்க் கிழமை அதன் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் முதல் நடுத்தர வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு ஒரு பெரிய தொகையை ஒரு முறை வழங்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
பத்து ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் ஒருமுறை வழங்குதொகைக்குச் சம்பள மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
2023 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திற்கான தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
பொருளியல் சூழல் நிச்சயமற்று உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வர்த்தகச் செலவுகள் மிகைப்படால் அதே சமயத்தில் ஊழியர்களுக்கு உதவும் வகையிலும் முதலாளிகளுக்கு அதிக சுமையை ஏற்றாத வகையிலும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாதம் $2,500 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரும் ஆண்டில் குறைந்தது 5.5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று மன்றம் தெரிவித்தது.
பரிந்துரைக்கப்பட்ட ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு நடைமுறைகள், அத்துடன் ஊதிய உயர்வுக்கான பரிந்துரைக்கப்படும் வரம்புகள், குறிப்பாக குறைந்த வருமான ஊழியர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் வழிகாட்டுதல்களில் பரிந்துரைகள் ஒரு பகுதியாகும்.
சிறப்பாக செயல்படும், எதிர்காலத்தில் நல்ல வர்த்தக வாய்ப்புகளை எதிர்நோக்கும் நிறுவனங்கள், குறைந்த வருமான ஊழியர் பிரிவில் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு சம்பளத்துடன் சம்பள உயர்வு அல்லது குறைந்தது $85 முதல் $105 வரை இதில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும்.
சிறப்பாகச் செயல்பட்டு, ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமற்ற சூழலை எதிர்பார்க்கும் முதலாளிகள் இத்தகைய ஊழியர் பிரிவில் கீழ்மட்ட மற்றும் நடுத்தர பிரிவில் உள்ளவர்களுக்கு சம்பளத்துடன் சம்பள உயர்வு அல்லது குறைந்தது $85 முதல் $105 வரை அதில் எது அதிகமோ அந்த உயர்வை வழங்க வேண்டும்.
நன்றாகச் செயல்படாத நிறுவனங்களின் முதலாளிகள் குறைந்த வருமானப் பிரிவில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு சம்பளத்துடன்கூடிய சம்பள உயர்வை வழங்க வேண்டும்.
வர்த்தகம் மேம்பட்டு வந்தால் ஊழியர்களுக்கு மேலும் சம்பள உயர்வு வழங்குவதை முதலாளிகள் பரிசீலிக்க வேண்டும் என்று மன்றம் கூறியது.
தேசிய சம்பள மன்றத்தில் தொழிற்சங்கம், முதலாளிகள், அரசாங்கம் ஆகியவற்றின் பிரிதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
“இந்தச் சம்பள உயர்வை அமல்படுத்துவதில் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு நிலையான அடிப்படை சம்பளம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” எனறு மன்றம் கேட்டுக் கொண்டது.
குறைந்த வருமான ஊழியர்களுக்கான மன்றத்தின் பொதுவான பரிந்துரைகள் கட்டாயமல்ல.