பெய்ஜிங்: சீன, அமெரிக்கத் தலைவர்கள் இம்மாத இறுதிவாக்கில் சந்திக்கவிருக்கும் வேளையில், அவ்விரு நாடுகளும் தங்களுக்கிடையிலான உறவை எவ்வாறு நிர்வகித்து வருகிறது என்பதைப் பார்க்கவே பெரும்பாலான உலகத் தலைவர்கள் விரும்புகின்றனர் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
கடந்த காலம் போலல்லாமல், அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் டாக்டர் இங் சொன்னார்.
சீனாவுக்கான நான்கு நாள் பயணத்தின் முடிவில் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இவ்வாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த சீன வேவு பலூன் விவகாரத்தை மேற்கோள் காட்டினார். அந்தச் சம்பவத்தின் காரணமாக பெய்ஜிங்குக்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை ஒத்தி வைத்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்.
இதற்கிடையே, சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துக்கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
ஆனால், அத்தலைவர்களின் சந்திப்பின்போது, அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் டாக்டர் இங் கருத்துரைத்தார்.
காஸா விவகாரத்தில் சீனா எப்படி பங்களிக்கலாம் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. நாங்கள் அதை ஒவ்வொரு வாரமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,” என்றார் அமைச்சர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலைக் கண்டித்த சிங்கப்பூர், தனது நாட்டைத் தற்காத்துக்கொள்ள எல்லா உரிமையும் உண்டு என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
“சுய தற்காப்புக்காக போரிடும் அதேவேளையில், இஸ்ரேல், அப்பாவி மக்களின் உயிரையும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்துலக சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும்,” என்றும் டாக்டர் இங் சொன்னார்.
“ஏதாவது ஒரு நாடு முன்வந்து இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் உலகம் அதைப் பெரிதும் வரவேற்கும். ஆனால், யார் அவ்வாறு முன்வருவார்கள் என்று சொல்ல முடியவில்லை. சீனாவாகவும் இருக்கலாம் அல்லது வேறொரு நாடாகவும் இருக்கலாம்,” என்றும் அமைச்சர் இங் விவரித்தார்.