சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்றப்படும்போது ஒரு பூனை தப்பியோடியது.
விமான நிலையத்தில் ஐந்து நாள்களாக தேடப்பட்ட பிறகு இப்பூனை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் பூனையின் உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இச்சம்பவம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று நிகழ்ந்ததாக அய்க்கோ என்ற பெயர் சூட்டப்பட்ட இப்பூனையின் உரிமையாளரான ஏட்ரியன் வோங் எனும் ஆடவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
திரு வோங், தனது பூனை இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் பயணம் மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து உதவி நாட அவர் ‘லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் பெட்ஸ்’ எனப்படும் காணாமற்போன செல்லப் பிராணிகளுக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
விமான நிலையத்தின் சரக்குகள் கையாளப்படும் பகுதியில் பூனை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எட்டு வயதாகும் அவரின் பூனை இம்மாதம் ஒன்றாம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டதாக அதே ஃபேஸ்புக் பக்கத்தில் திரு வோங் குறிப்பிட்டார். அவரின் இப்பதிவுக்கு 1,000க்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் உணர்வுகளை (ரியாக்ஷன்ஸ்) வெளியிட்டனர். உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் திரு வோங் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.