பிரதமர் லீ: 2024 நவம்பருக்குள் துணைப் பிரதமர் வோங்கிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பேன்

பிரதமர் லீ: 2024 நவம்பருக்குள் துணைப் பிரதமர் வோங்கிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பேன்

4 mins read
bf559846-01b8-439c-8188-40b5496d6560
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பிரதமர் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசியலில் பெரிய மாற்றமாக பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக் கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு 2024ஆம் ஆண்டு நவம்பருக்குள் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் கட்சியின் தலைமை பொறுப்பை ஒப்படைப்பேன் என்று பிரதமர் லீ அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

அதன்படி அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி திரு லாரன்ஸ் வோங் தலைமையில் போட்டியிடும்.

“தான் தயாராக இருப்பதாக லாரன்ஸ் என்னிடம் கூறியுள்ளார். அவர் மீதும் அவரது குழு மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்த எந்தக் காரணமும் இல்லை,” என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

Watch on YouTube

சிங்கப்பூர் எக்ஸ்போ மாநாட்டு, கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் செயல் கட்சி (மசெக) மாநாட்டில் திரு லீ உரையாற்றினார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசெக தொண்டர்கள் அதில் பங்கேற்றனர்.

கொவிட்-19 தொற்றுநோய் பிரச்சினை காரணமாக எதிர்பார்த்தபடி தனது 70வது பிறந்த நாளுக்கு முன்பு திரு வோங்கிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியவில்லை என்று கூறிய திரு லீ, எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த ஆண்டு மக்கள் செயல் கட்சியின் 70வது ஆண்டில் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பேன்,” என்றார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர்கள் ஏற்கெனவே திரு வோங்கை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதையும் இந்தத் தேர்வை மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கீகரித்துள்ளளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்கு பின்போ பொறுப்பை ஒப்படைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

“பொதுத் தேர்தலுக்கு முன்பு துணைப் பிரதமர் வோங்கிடம் பொறுப்பை ஒப்படைப்பதால் அவர் தேர்தல் பிரசாரத்தில் கட்சியை வழிநடத்துபவராக இருப்பார். அவரது சொந்த முயற்சியில் வெற்றி பெற்று தேசத்தின் முழு ஆதரவுடன் நாட்டை அவர் முன்னோக்கிக் கொண்டு செல்வார்,” என்று அவர் கூறினார்.

“எந்தவொரு நாட்டிலும் தலைமைத்துவ மாற்றம் என்பது நுட்பமானது. அதில் பல விவகாரங்கள் தவறாகப் போகலாம். சிங்கப்பூரர்களும் சிங்கப்பூருக்கு வெளியே உள்ள மக்களும் அருகில் மற்றும் தொலைவில் உள்ளவர்களும் இந்த மாற்றத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். நமது வரலாற்றில் இந்த மூன்றாவது மாற்றத்தின் வெற்றியைப் பொறுத்தே எல்லாமே அமையும்,” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான முடிவை மிகவும் கவனமாகப் பரிசீலித்ததாகவும் திரு வோங் மற்றும் 3ஆம் தலைமுறை, 4ஆம் தலைமுறை தலைவர்களுடன் முழுமையாக மாற்றம் குறித்து விவாதித்ததாகவும் திரு லீ சொன்னார்.

துணைப் பிரதமர் வோங்கும் நான்காம் தலைமுறைக் குழுவும் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருவதையும் பல பெரிய முக்கிய பொறுப்புகளை ஏற்று முடித்துள்ளதையும் திரு லீ ஒப்புக் கொண்டார்.

“அவர்கள் தலைமை தாங்குவதற்கு சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர். கொவிட்-19 தொற்றுநோய் காலத்தின்போது மக்களிடமிருந்து நற்பெயரைச் சம்பாதித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ போன்ற தேசிய அளவிலான நடவடிக்கைகளை அவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

“இதனால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன்.

“அதன் பிறகு நான் புதிய பிரதமரின் கீழ் இருப்பேன். எனக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நினைக்கும் இடத்திற்கு நான் செல்வேன்.

“அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவும் அவர்களின் பொறுப்புகள் நிறைவேறவும் நாட்டை வழி நடத்துவதற்கும் அவருக்கும் அவரது குழுவினருக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இதனால் எனக்குப் பிறகும் என்னுடைய 3ஆம் தலைமுறை அமைச்சர் சகாக்களுக்குப் பிறகும் பல வரப்போகும் அதிக ஆண்டுகளில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகளைச் சாதிக்கும்,” என்று அவர் கூறினார்.

தமது வாழ்க்கையின் பெரும்பகுதி, சிங்கப்பூர் ஆயுதப் படையிலிருந்து தொடங்கி, பின்னர் மக்கள் செயல் கட்சி, அதன் பிறகு அரசாங்கம் என நாட்டிற்கு சேவையாற்றியது எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் மற்றும் கௌரவம்,” என்று பிரதமர் லீ கண்ணீரை அடக்கிக் கொண்டு கூறியபோது மண்டபத்தில் பெரும் கரவொலி எழுந்தது.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, தான் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கப்பூரும் மக்கள் செயல் கட்சியும் பல மாற்றங்களைக் கடந்து வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

“சில அம்சங்கள் எப்போதும் மாறாது. சிங்கப்பூருக்கு அர்ப்பணிப்புடன் இருப்பது, மக்களுக்கு சேவை செய்வதற்கான கடமை உணர்வு. இவற்றில் மாற்றமிருக்காது. ஆனால் இந்தத் தீவை பாதுகாப்பாக வைத்திருப்பது வருங்கால தலைமுறையினரின் கடமை.

“திரு லாரன்ஸ் வோங்குக்கும் அவரது குழுவினருக்கும் உங்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும். தேர்தலில் வலுவான வெற்றியைப் பெற அவர்களுக்கு உதவுங்கள். சிங்கப்பூரை அடுத்த உச்சத்திற்கு எடுத்துச் செல்ல அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்