சமூக சேவை, மழலையர் துறைகளில் ஆய்வு, கல்வி, பயிற்சி ஆகிய அம்சங்களை வலுப்படுத்த புதிய ஒத்துழைப்புகள் இடம்பெறவுள்ளன.
அவற்றுக்கு வழிவகுக்கும் இணக்கக் குறிப்பு கையெழுத்தாகியுள்ளது. சனிக்கிழமையன்று கையெழுத்தான அந்த இணக்கக் குறிப்பின்கீழ் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய சமூக சேவை மன்றம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல்படும்.
அதன்படி அக்கூட்டணி, குடும்பம், மழலையர் சார்ந்த அம்சங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதன் மூலம் சமூகக் கொள்கைகள் தொடர்பான புரிதலை சம்பந்தப்பட்ட நிபுணர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கிடையே ஏற்படுத்துவது இலக்கு.
அதோடு, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சேவை சார்ந்த கற்றலுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.
சமூக சேவைக் கழகம், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சமூக சேவை நிபுணர்களுக்குக் கூடுதலான இலவச மின்கற்றல் வளங்களை வழங்கும். முதியோர் நலன், மனநலம் உள்ளிட்ட அம்சங்களை மின்கற்றல் வளங்கள் கொண்டிருக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி தெரிவித்தார்.
சமூக சேவை விருது, பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திரு மஸகோஸ் பேசினார்.
சமூக சேவைக் கழகம் தற்போது 50 மணிநேரத்துக்கு நீடிக்கும் மின்கற்றல் வளங்களை வழங்குகிறது. இனி 100 மணிநேரத்துக்கும் மேல் நீடிக்கும் மின்கற்றல் வளங்களை கழகம் வழங்கும்.