முழு ஊர்வலத்துடன் மீண்டும் தீமிதித் திருவிழா

2 mins read
882e3bf0-6160-4afa-a868-ba067f550d79
மொத்தம் 3,346 ஆண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். 680 பெண் பக்தர்கள் பூக்குழியைச் சுற்றி வலம் வந்தனர். 800 பேர் அங்கப் பிரதட்சணமும் 2,532 பேர் கும்பிடுதண்டமும் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். - படம்: த.கவி

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு இடம்பெற்ற அதே முழு ஊர்வலத்துடன் தீமிதித் திருவிழா நிறைவுபெற்றது. ஆழ்ந்த இறைநம்பிக்கையுடனும் ஆயிரம் தொண்டூழியர்களின் உதவிக்கரங்களைப் பிடித்துக்கொண்டும் ஏறத்தாழ 3,500 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) மாலை பூக்குழியைக் கடந்து இறைதரிசனம் செய்தனர்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று மாதத் திருவிழாவின் முத்தாய்ப்பாக தீமிதித்தல் நடைபெற்றது. பெரியாச்சி பூஜை, ஆஞ்சநேயர் கொடியேற்ற விழா, அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி, படுகளம் உள்ளிட்ட சடங்குகளில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 5 மணி அளவில் சற்று நேரம் பூக்குழியை மழைமேகங்கள் மேலிருந்து வேய்ந்தபோதும் பின் மாலை வெயில் சிரிக்கத் தொடங்கியது.

தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, 39, சக்தி கரகத்தைச் சுமந்து ஆடிய காட்சி.
தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, 39, சக்தி கரகத்தைச் சுமந்து ஆடிய காட்சி. - படம்: த.கவி

தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, 39, பெருமாள் கோயிலிலிருந்து பக்தர்கள் பின்தொடர நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாரியம்மன் கோயிலை 6 மணி வாக்கில் அடைந்தார். கோயிலின் முகப்பில் நாயன நாதத்திற்கும் தவில் மேளச் சத்தத்திற்கும் ஏற்ப சக்தி கரகத்தைச் சுமந்து ஆடி, பூக்குழியைக் கடந்தார்.

18 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பூக்குழியை 36 தொண்டூழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே எரியூட்டத் தொடங்கினர். பூக்குழிக்காக 20,000 ‘பாக்கன்’ எனப்படும் காட்டு வேம்பு விறகுகள் இதற்காகத் தருவிக்கப்பட்டன.

திருவிழாவுக்காக சுமார் 3,600 பேர் பால்குடம் சுமந்தனர். 800 பேர் அங்கப் பிரதட்சணம் செய்தனர். சிங்கப்பூரில் பூக்குழி இறங்கப் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் இதர வேண்டுதல்களை 650 பெண்கள் நிறைவேற்றினர்.

பெருமாள் கோயிலும் மாரியம்மன் கோயிலும் 15,000 வரையிலான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கின.

சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியான தீமிதித் திருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் கூறிய முழுநேர ஆகாயப்படை சேவையாளரான கிஷன், 35, தம் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரையும் பார்த்த மனநிறைவு கிடைத்தது என்றார்.

பத்தாண்டுகளாக பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றி வரும் இவர், இம்முறை ஊர்வலமாக நடக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பிறகு ஏற்பாடுகள் மேம்பட்டுள்ளதாகக் கூறினார் கப்பல் தளவாடத் துறையில் நிபுணராகப் பணியாற்றும் புவனேஸ்வரி வரதராஜன், 36.

ஆலயத் தொண்டூழியர்கள் கும்பிடுதண்டம் செய்ய வந்திருந்த தம் ஏழு வயது அக்கா மகனுக்கு ஊக்கம் கொடுத்தது நெகிழ வைத்ததாகக் குமாரி புவனேஸ்வரி சொன்னார். 

குறிப்புச் சொற்கள்