கர்ப்பிணிகள் எம்ஆர்என்ஏ ரக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பிறந்து சில நாள்களில் இறக்கும் அபாயமும் பிறந்தவுடன் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. 142,000 பிறந்த குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் (ஜாமா) அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டன.
கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், குறைந்தது ஓர் எம்ஆர்என்ஏ ரக தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டோருக்குப் பிறந்த 85,670 குழந்தைகளுக்கு மோசமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 14 விழுக்காடு குறைவு என்றும் இறக்கும் அபாயம் 78 விழுக்காடு குறைவு என்றும் ஆய்வில் தெரிய வந்தது.
அந்த வகையில் சிங்கப்பூரிலும் கர்ப்பிணிகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கருத்துரைத்திக்கின்றனர்.