2024ல் கட்டப்பட இருக்கும் புதிய சாங்கி நியூவாட்டர் ஆலை

2024ல் கட்டப்பட இருக்கும் புதிய சாங்கி நியூவாட்டர் ஆலை

2 mins read
f3f13c3a-9602-4972-adda-d687bea4aee5
சிங்கப்பூரில் தற்போது ஐந்து நியூவாட்டர் ஆலைகள் உள்ளன. - படம்: சாவ்பாவ்

சாங்கியில் மேலும் ஒரு நியூவாட்டர் ஆலை ஒன்று கட்டப்பட இருக்கிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புதிய ஆலை சாங்கியில் உள்ள பயன்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு ஆலையில் கட்டப்படும். ஆலைக்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஆலையின் வெளியேற்றங்கள் கடலையும் கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்காது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சுத்திகரிப்பு ஆலையில் ஏற்கெனவே இரண்டு நியூவாட்டர் ஆலைகள் உள்ளன.

குடிநீருக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூருக்குக் கிடைக்கும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் மேலும் ஒரு நியூவாட்டர் ஆலை கட்டப்படுகிறது.

இந்த ஆலையைக் கட்டுவதற்கான திட்டம் 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆலை கட்டப்பட்டால் சுற்றுப்புறத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன.

சிங்கப்பூரில் தற்போது ஐந்து நியூவாட்டர் ஆலைகள் உள்ளன. சாங்கியில் இரண்டு ஆலைகள் உள்ளன. பிடோக், உலு பாண்டான், கிராஞ்சி ஆகியவற்றில் தலா ஓர் ஆலை உள்ளன.

பிடோக்கில் உள்ள பழைய ஆலைக்குப் பதிலாகப் புதிய ஆலை கட்டப்படுகிறது.

பிடோக்கில் உள்ள ஆலை அமைந்திருக்கும் இடத்தை வேறு பயன்பாட்டுக்கு விட பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

புதிய நியூவாட்டர் ஆலை நாள்தோறும் 50 மில்லியன் கேலன் குடிநீரை உற்பத்தி செய்யும் என்று கழகம் கூறியது.

நியூவாட்டர் பெரும்பாலும் நீர் கட்டுருவாக்க ஆலைகள், தொழிற்பேட்டைகள், வர்த்தகக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்படும்.

2065ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்கான நீர் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பு அல்லாது மற்ற துறைகளிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆலையில் தண்ணீரைச் சுத்திகரிக்க வேறொரு முறை கடைப்பிடிக்கப்படும்.

அந்த முறை மூலம் தண்ணீர் விரயமாவது குறையும்.

சுத்தகரிக்கப்படும் தண்ணீரில் 10 விழுக்காடு மட்டுமே வெளியேற்றப்படும்.

ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் வேண்டாத தண்ணீர் கடலில் விடப்படும்.

கடலில் விடப்படும் தண்ணீரில் போஸ்பேட்டின் அளவு கடலுக்கும் கடலில் உள்ள உயிரினத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

போஸ்பேட் அளவுக்கு அதிகமாக இருந்தால் அது கடலில் பாசியைப் பெருகச் செய்துவிடும். இதனால் கடலுக்குள் உயிர்வாயு செல்வது தடுக்கப்பட்டு மீன் போன்ற உயிரினங்கள் மடிய காரணமாகிவிடும்.

குறிப்புச் சொற்கள்