தனது முதலாளியின் தந்தைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியின்றி 89 முறை பணம் எடுத்த பணிப்பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான 32 வயது எகா யுனியார்சி அனுமதியின்றி மொத்தம் 88,600 வெள்ளியை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தனது தாய்நாடான இந்தோனீசியாவில் அவருக்கு அதிகக் கடன் இருந்ததால் அவர் அவ்வாறு செய்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் எகா அனுமதியின்றி பணத்தை எடுத்திருக்கிறார். இந்தோனீசியாவில் தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அப்பணத்தை அனுப்பியிருக்கிறார்.
முதியவர் இறந்த பிறகு எகா செய்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. எகா பணத்தைத் திரும்பத் தரவில்லை.
அவர் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தபோது முதியவருக்கு 95 வயது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை எகா செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார். அவருக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இழப்பீடாக 5,442 வெள்ளியைச் செலுத்துமாறும் எகாவுக்கு உத்தரவிடப்பட்டது.