சிங்கப்பூரின் பெரும்பாலான மூத்தோர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையான மூச்சுத்திணறலுக்குத் தீர்வுகாணும் நோக்கில் லியன் அறக்கட்டளையும் டான் டோக் செங் மருத்துவமனையும் இணைந்து $5.8 மில்லியன் நிதியுதவியுடன் ‘ஏர் மாஸ்டர்ஸ்’ எனும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரர்களில் 5.9 விழுக்காட்டினர் நாட்பட்ட நுரையீரல் நோயாலும் 4.5 விழுக்காட்டினர் இதய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 முதல் 90 விழுக்காட்டினர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் உதவியற்ற நிலையையும், நம்பிக்கையற்ற உணர்வையும் போக்கி, சராசரி வாழ்வை மீட்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு ஆசிய மகளிர் நல்வாழ்வுச் சங்கம், ரென் சி மருத்துவமனை, செயின்ட் லூக்கின் எல்டர்கேர் ஆகிய சமூக மன்றங்கள் பங்களிக்கின்றன.
இத்திட்டம் நவம்பர் 16 ஆம் நாள், அங் மோ கியோவில் உள்ள ‘ஏவா (AWWA)‘ மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் பங்கேற்றுப் பேசிய டான் டோக் செங் மருத்துவமனையின் நோய்த்தடுப்பு, இதயநோய்ப் பிரிவு மருத்துவர்கள், தங்கள் மேற்பார்வையில் இவ்வகை பயிற்சிபெற்ற நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கும் வேலைக்கும் திரும்பியதைச் சுட்டிக்காட்டினர்.
இந்த ஏர் மாஸ்டர்ஸ் திட்டத்தின் கீழ், மறுவாழ்வு மையங்களில் பணியிலிருக்கும் ‘தெரப்பிஸ்ட்’ எனப்படும் சிகிச்சையாளர்களுக்கு டான் டோக் செங் மருத்துவமனை மூலம் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடும் நோய்க்கு ஆளாகியுள்ள நோயாளிகளுக்கு, மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப மருத்துவ தாதியர் மேற்பார்வையில் இந்த தேர்ச்சி பெற்ற சிகிச்சையாளர்கள் மூலம் மூச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பகிரப்பட்டது. இத்திட்டத்தினால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 800 நோயாளிகள் பயன்பெறுவர்.
இவ்வகையில் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம், அவர்களின் மருத்துவச் செலவுகளும் குறைக்கப்படும். சிங்கப்பூரில் தற்போது நுரையீரல், இதய நோய்களுக்கு செய்யப்படும் செலவு புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட ஏறத்தாழ 60 விழுக்காடு அதிகம். தேவையற்ற மருத்துவமனைச் சேர்க்கை, கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் செயற்கை சுவாசச் சார்பு ஆகியவற்றைத் தடுக்கலாம்.
“கடும் மூச்சுத்திணறலால் அவதிப்படும் நோயாளிகள், வீட்டை விட்டு வெளியில் வர பயப்படுவதால் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றத்திற்கு ஆளாதல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
நாளடைவில் தினசரி நடவடிக்கைகள் செய்வதும் கடினமாக மாறிவிடுகிறது. இதனை உரிய பயிற்சிகள் மூலம் சரிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கம்,” என்று குறிப்பிட்டார் லியன் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி லீ போ வா.
“நோய் அறிகுறி ஏற்பட்டதில் தொடங்கி, சிகிச்சைக்குப் பின்னான மறுவாழ்வுப் பயிற்சி வரை ஒரு முழு கட்டமைப்பாக உருவாகும் இத்திட்டத்தின் மூலம், மூத்தோர்களுக்கு மூச்சுத் திணறல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவமனைகளில் சிகிச்சையுடன் கூடிய பயிற்சிகள் வழங்குவது, வீட்டிற்கே சென்று பயிற்சிகள் வழங்குவது என கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது,” என்றார் ஆசிய மகளிர் நல்வாழ்வுச் சங்க தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன்.