ஜகார்த்தா: ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் எட்டு பங்காளித்துவ நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொண்ட ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் சந்திப்பு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.
அதில் கடினமான விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடிய அமைச்சர்கள் வெளிப்படையாகக் கருத்துரைத்ததாகவும் அவர்களது மாறுபட்ட கருத்துகள் மூலம் அந்த விவகாரங்கள் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.
சந்திப்பில் கலந்துகொண்ட டாக்டர் இங் உள்ளிட்ட அமைச்சர்கள், உலகளாவிய பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
சந்திப்பிற்குப் பிறகு வெளியிட்ட ஊடக அறிக்கையில், ஏடிஎம்எம்-பிளஸ்’ அமைப்பு கருத்து மோதல்களைத் தவிர்ப்பது முக்கியம் என்றும் பருவநிலை மாற்றம் போன்ற புதிய சவால்களைக் கையாள்வது அவசியம் என்றும் டாக்டர் இங் எடுத்துக்கூறினார்.
“சந்திப்பில் பங்கேற்ற நாடுகளின் அமைச்சர்கள், பிரச்சினைக்குரிய அம்சங்களை மறைக்க முயலவில்லை. அவை தொடர்பான மாறுபட்ட கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதால் அவரவர் கருத்தை எடுத்துரைத்தனர். அதனால் அந்தக் கடினமான விவகாரங்கள் தொடர்பில் முன்னேற்றம் காண முடிந்தது,” என்றார் டாக்டர் இங்.
இந்தச் சந்திப்பில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மியன்மாரில் வன்முறையை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் ஒப்பந்தம் தொடர்பில் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் இணக்கம் கண்டனர்.
2021ஆம் ஆண்டு ஆசியான் அமைப்பு வெளியிட்ட அமைதித் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அவர்கள் இணங்கினர்.
அமைதித் திட்டங்களை அமலுக்குக் கொண்டுவரத் தவறியதாலும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்பதாலும் மியன்மாரின் ராணுவ அரசாங்கம், ஆசியான் அமைப்பின் முக்கியக் கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கும் ஆசியான் நாடுகளான புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகியவற்றுக்கும் இடையில் அமைதியைக் கட்டிக்காப்பது முக்கியம் என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
சந்திப்பில், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
பங்கேற்ற நாடுகள் சில, ரஷ்யாவின் சட்டவிரோதப் படையெடுப்பை வன்மையாகக் கண்டித்ததாகவும் ரஷ்யா அதன் தரப்புக் காரணங்களை எடுத்துரைத்ததாகவும் டாக்டர் இங் கூறினார்.
கொரியத் தீபகற்பம், காஸா நிலவரம் போன்றவை குறித்தும் அமைச்சர்கள் கருத்துப் பரிமாறியதாக அவர் குறிப்பிட்டார்.