சிங்கப்பூரில் அடுத்த ஈராண்டுகளில், மின்னிலக்கம், பராமரிப்பு என இரு துறைகள் சார்ந்த வேலைத் திறன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) வெளியான எதிர்காலப் பொருளியலுக்கான வருடாந்தர வேலைத் திறன் தேவை அறிக்கை அதனைத் தெரிவித்தது.
முதல்முறையாக அந்த அறிக்கையில், 24 முன்னிலை வேலைத் திறன்கள் முன்னுரைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
மின்னிலக்கப் பொருளியல் துறையில் தர ஆய்வு, மென்பொருள் உருவாக்கம் போன்ற திறன்களோடு பராமரிப்புத் துறையில், வாடிக்கையாளருடன் திறன்படத் தொடர்புகொள்ளல் உள்ளிட்ட வேலைத் திறன்கள் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தத் திறன்கள், பல்வேறு துறைகளில் வெவ்வேறு வேலைகளுக்குப் பொருந்தக்கூடியவை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தியை மேம்படுத்த தானியக்கத் தொழில்நுட்பம், அறிவுசார் தீர்வுகள் ஆகிய நடைமுறைகளைப் பயன்படுத்தும் ‘இண்டஸ்ட்ரி 4.0’ எனப்படும் வேலைத் திறன்களும் அந்த முன்னுரைப்பில் இடம்பெற்றுள்ளன.
அடுத்த ஈராண்டுகளில் அத்தகைய வேலைத் திறன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) அமைப்பு மூன்றாவது முறையாக எதிர்காலப் பொருளியலுக்கான வருடாந்தர வேலைத் திறன் தேவை முன்னுரைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான வேலை நியமனங்களை ஆய்வு செய்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி, மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
ஊழியர்கள் நீண்டகால வேலை இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய திறன்களைக் கற்றுக்கொள்வதில் அறிவார்ந்த முடிவுகளை எட்ட இந்த அறிக்கை உதவும் என்றார் அவர்.
ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் துறைக்குள்ளும் அதற்கு வெளியிலும் வெவ்வேறு வேலைகளுக்கு மாறும் சூழலில், வருங்காலத்தில் பணியிடை மாற்றங்கள் மேலும் அதிகரிக்கும் என்றார் திருவாட்டி கான்.
எஸ்எஸ்ஜி அமைப்பு முதல்முறையாக இந்த அறிக்கையை இணையத்திலும் வெளியிட்டுள்ளது.
வேலைச் சூழல் விரைவான மாற்றம் கண்டபோதும் கடந்த பத்தாண்டுகளில் சில வேலைத் திறன்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக அது தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, தொடர்புத் திறன்தான் தொடர்ந்து ஆக அதிகத் தேவையுடையதாக விளங்குகிறது. அடுத்த நிலையில், புத்தாக்கச் சிந்தனை, ஒத்துழைப்பு, சிக்கல்களுக்குத் தீர்வுகாணுதல், சுய கட்டுப்பாடு ஆகியவை இருக்கின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பத் துறையில் வேலைத் திறன்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது.
சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், பராமரிப்புத் துறை சார்ந்த வேலைத் திறன்களுக்கான தேவை அதிகரித்துவருவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.