‘சிங்கப்பூர் ஐடல்’ போட்டியின் முன்னாள் நடுவர் கென் லிம் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தனித்தனியே விசாரிக்கப்படவிருக்கின்றன.
ஐந்து பெண்கள் தொடர்பில் அவர்மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவற்றை ஒரே விசாரணையின்கீழ் கொண்டுவர அரசாங்கத் தரப்பு மனுக் கொடுத்திருந்தது.
ஆனால், மாவட்ட நீதிபதி வோங் பெக் அதை நிராகரித்தார். எனவே தனித்தனியே ஐந்து விசாரணைகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பெண்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் என்றும் குற்றச் செயல்கள் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுவதையும் எடுத்துக்காட்டி கென் லிம் தரப்பு வாதிட்டதை ஏற்று, தனித்தனி விசாரணைகளுக்கு உத்தரவிட்டதாக மாவட்ட நீதிபதி கூறினார்.
59 வயது லிம், 1998க்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே ஐந்து பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் டிசம்பர் 8ஆம் தேதி, லிம்மிடம் விசாரணைக்கு முந்தைய சந்திப்பு இடம்பெறும்.