குவீன்ஸ்டவுனில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பிளெஸ்ட் சேக்ரமண்ட்’ தேவாலயம், ஈராண்டு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
விரிவான புதுப்பிப்புப் பணிகளுக்காக 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அது மூடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அந்த தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக சிங்கப்பூர் அரசிதழில் இடம்பெற்றுள்ள ஏறக்குறைய 7,000 கட்டடங்களில் ‘பிளெஸ்ட் சேக்ரமண்ட்’ தேவாலயமும் அடங்கும். 2005ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அந்தப் பட்டியலில் அது இடம்பெற்றது.
அத்தகைய கட்டடங்களில், பழைமைப் பாதுகாப்பு வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றியே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்டடத்தின் வடிவமைப்பு, கட்டடக்கலை அம்சங்கள் மாறாமல் பாதுகாக்கப்படுவது அவசியம்.
மீண்டும் திறக்கப்பட்டுள்ள தேவாலயத்தில் சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தேவாலய வாயிலில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வுப் பாதையும் அவற்றுள் ஒன்று.
மேற்கூரையிலும் முன்னர் கல்நார் இழையால் தயாரிக்கப்பட்ட ஓடுகளுக்குப் பதிலாக உலோக ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டதை முன்னிட்டு நவம்பர் 18 முதல் 25ஆம் தேதி வரை பல்வேறு கொண்டாட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.