சிக்கல்மிகுந்த உலகளாவிய உத்திபூர்வ நிலைத்தன்மை, வர்த்தகத்தின் மீதும் கடுமையான எச்சரிக்கைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று ஏபெக் எனும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலைக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, சிங்கப்பூருக்கு ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதற்கு நிறைய அறிகுறிகள் உள்ளன என்றார்.
புதிய ஆசிய பசிபிக் பொருளியல் உடன்பாடு, வர்த்கத்துக்கு அப்பால் ஏபெக்கின் நிகழ்ச்சி நிரலை விரிவாக்குதல், பைடன்-ஸி உச்சநிலைக் கூட்டத்துக்குப் பிறகு உருவான வெளிச்சம் போன்றவை சிங்கப்பூருக்கு வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நம்பிக்கை தந்துள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்த வாரம் நடத்திய சந்திப்பு, இரு வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் நிலையானதாக வைத்திருப்பதற்கான முக்கியப் படி என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
அதேவேளையில், உயர் தலைவர்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் அணுக்கமான தொடர்பு தொடரவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, அடுத்த ஆண்டு பல முக்கியமான நிகழ்ச்சிகள் இடம்பெறவிருப்பதை அவர் சுட்டினார்.
அமெரிக்காவிலும் ஆசிய நாடுகள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்கள் அந்த முக்கிய நிகழ்ச்சிகளில் அடங்கும்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் எளிதில் உரசல் ஏற்படுத்தும் அம்சமாக தைவான் விளங்குகிறது. அங்கு வருகிற ஜனவரி 13ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
“சில விவகாரங்கள் எழக்கூடும். சிக்கலுக்குரிய வெவ்வேறு அம்சங்களில் புதிய மாற்றங்களால் சூடு பிடிக்கக்கூடும். இரு நாடுகளும் தொடர்பில் இருந்தால் அத்தகைய சவால்களைச் சமாளிப்பதற்கு மேம்பட்ட வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு லீ.
எப்போது என்ன நிகழும் என்று முன்னுரைக்க இயலாத உலகில், சிங்கப்பூர் அதன் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து விவேகமாகவும் விரைந்து முடிவெடுக்கும் திறனுடனும் திகழ்வது அவசியம் என்று பிரதமர் கூறினார்.
நவம்பர் 15ஆம் தேதி, ஏப்பெக் உச்சநிலை மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சந்தித்துப் பேசினர்.
ஓராண்டுக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்ட தலைவர்கள் இருவரும், இரு நாடுகளுக்கு இடையே மோசமடைந்த உறவுகளை மீட்கும் முயற்சியாக அவ்வாறு சந்தித்துப் பேசினர்.
அது முக்கியப் படி என்றபோதும் அமெரிக்க-சீன உறவுகளில் நேர்ந்த விரிசலைச் சீர் செய்வது அவ்வளவு எளிதன்று என்று கருதுவதாக திரு லீ குறிப்பிட்டார்.
ஆறு நாள் பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்ற அவர், நவம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு கருத்துரைத்தார்.
அமெரிக்க, சீன அதிபர்களின் சந்திப்பின்போது, ராணுவத் தொடர்பு வழித்தடங்களை மீட்டெடுப்பது குறித்து எடுக்கப்பட்ட முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2022ஆம் ஆண்டு அமெரிக்க மக்களவைத் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து அந்த தொடர்பு வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டன.
இருதரப்பு உறவுகள் மோசமாகாமல் தடுப்பதற்கு இரு அதிபர்களின் சந்திப்பு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில் ஏற்றுமதி செய்தல், முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றில் அமெரிக்கா மட்டுமன்றி சீனா, ஆசியான், இந்தியா ஆகியவற்றுடனும் ஈடுபடுதலும் அனைத்துத் தரப்புகளுடன் பங்காளித்துவம் பேணுதலும் தொடரும் என்று பிரதமர் லீ கூறினார்.