பிளைமத் அவென்யூவில் அமைந்திருக்கும் ராஃபிள்ஸ் டவுன் கிளப்பின் குத்தகைக் காலம் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அதன் பிறகு அவ்விடத்தில் வீடுகள் கட்டப்படும் என்று சிங்கப்பூர் நில ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அந்த இடம் உள்ளது.
சிங்கப்பூரில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அதனால், முன்பு வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலங்களைக் குடியிருப்புப் பகுதிகளாக மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அதற்கேற்ப, ராஃபிள்ஸ் டவுன் கிளப் அமைந்துள்ள இடம் குடியிருப்புப் பகுதியாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடம் மறுசீரமைக்கப்படுவதன் மூலம் அவ்வட்டாரத்தின் குடியிருப்பு அம்சங்கள் மெருகூட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வட்டாரத்துக்கும் நகர மையம், சிங்கப்பூரில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள இணைப்பாலும் போக்குவரத்துக் கட்டமைப்பாலும் எதிர்காலக் குடியிருப்பாளர்கள் பலனடைவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

