சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்ட சில முக்கிய முடிவுகள் குறித்த சிந்தனை தோன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் குடிலில், திரு லீயின் வாழ்வு, மரபு, பெருமை குறித்த சித்திரிப்புக் காட்சிகள் கொண்ட முனையை நவம்பர் 22ஆம் நாளன்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் திறந்து வைத்தார்.
கடந்த 1950களில் கட்டப்பட்ட, 26 நெதராவோன் சாலையில் உள்ள இந்த ‘சாங்கி குடில்’ 1980கள் வரை சிங்கப்பூர் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கான விடுமுறை விடுதியாகச் செயல்பட்டது.
இன்று அரசாங்க சேவை மன்றம் நிர்வகித்து வரும் இக்குடில்கள், பொதுமக்கள், பொதுச் சேவை அதிகாரிகள் முன்பதிவு செய்து தங்குவதற்குப் பயன்படுகிறது. இம்முனை திறக்கப்பட்டபின், இக்குடில்களில் தங்கும் அனைவரும் இம்முனையை ரசிப்பதோடு, சாங்கி அரசாங்கச் சேவை மன்றம் நன்கொடை அளித்த 16 நூல்களையும் படிக்கலாம்.
இத்திறப்பு விழாவினைத் தொடர்ந்து, அமைச்சர் சான், சிவில் சர்விஸ் கிளப் தலைமை நிர்வாகி சார்லி இங், தேசிய பூங்காக் கழகம், தேசிய நூலக வாரியத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்ட மரம் நடுவிழாவும் நடைபெற்றது.
தெம்புசு, ரெயின்ட்ரீ, சீ ஆப்பிள் (Tembusu, Raintree, Sea Apple) என திரு லீக்கு விருப்பமான மரங்கள் அங்கு வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு விருப்பமான மேலும் இரு மரங்கள் ‘ஜெலுத்தோங்’, ‘மடகாஸ்கர் பாதாம்’ உள்ளிட்ட ஒன்பது மரங்கள் இவ்விழாவில் நடப்பட்டன.
அவர் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்முனைத் திறப்பிற்குப்பின், மலேசியாவைவிட்டு சிங்கப்பூர் பிரிந்தது குறித்த வரலாற்றுக் கட்டுரைகள், திரு லீயின் பசுமைத் திட்டத்தின் அரசாங்கப் பதிவுகள், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் சேகரித்த தேசிய தினக் கூட்டங்களில் திரு லீ ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் எனப் பல நூல்களைப் பொதுமக்கள் இணைய வழியில் படிக்கலாம்.
இவ்விழாவில் கலந்துகொண்ட தேசிய நூலக வாரியத்தில் பணியாற்றும் நூலகர் சைனப், 27, “இந்த நாளை அர்த்தமுள்ளதாகச் செலவிட்டுள்ளதாக உணர்கிறேன். இந்த இடத்தின் பின்னணியில் உள்ள முக்கியத்துவதையும், வரலாற்றையும் குறித்து மேலும் அறிந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது,” என்றார்.