இருவரின் வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைந்த தனியார் வாடகை வாகன ஓட்டுநருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பயன்படுத்திய வாகன ஓட்டுநர் உரிமை அட்டைகளில் ஒன்று தனது வாடகை வாகனத்தில் பயணம் செய்தவருக்குச் சொந்தமானது. குற்றவாளி, அட்டைகளில் உள்ள தகவல்களை மாற்றித் தனது அடையாள விவரங்களைப் பதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவல்கள் மாற்றப்பட்ட ஓட்டுநர் உரிமை அட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளியான பாங் கிம் சுவான், மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகியவற்றில் இருக்கும் சூதாட்டக் கூடங்களுக்குள் பலமுறை நுழைந்திருக்கிறார்.
சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளான 56 வயது பாங், சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக் கூடங்களுக்குள் நுழையாமல் இருப்பதற்கான தடை உத்தரவைப் (செல்ஃப் எக்ஸ்குளுஷன் ஆர்டர்) பெற்றிருந்தார். அதனால் அவர் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்ல முடியாதிருந்தது.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங் கைது செய்யப்பட்டார். அவர் தகவல்கள் மாற்றப்பட்ட ஓட்டுநர் உரிமை அட்டைகளைப் பயன்படுத்தி மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக் கூடத்துக்குள் நுழைய முயன்றதை பாதுகாவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து பாங் கைதானார்.
சூதாட்டக்கூட கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை பாங் ஒப்புக்கொண்டார்.