ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஜெம் கடைத்தொகுதியில் பழுதடைந்த குழாய் காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியது.
இந்தச் சம்பவம் இம்மாதம் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
பழுதடைந்த குழாய் காரணமாக உட்கூரையிலிருந்து நீச்சல் குளத்திலிருந்து நீர் கசிந்து சில கடைகளுக்கு முன்னால் தேங்கியது.
பழுதுபார்ப்புப் பணிகள் இம்மாதம் 26ஆம் தேதி பிற்பகல் நிறைவடைந்ததாக கடைத்தொகுதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட கடைக்காரர்களில் ஒருவரால் மட்டும் வியாபாரத்தைத் தொடர முடியவில்லை. அவருடன் இணைந்து செயல்பட்டு தேவையான உதவிகளை வழங்குகிறோம்,” என்று செய்தித்தொடர்பாளர் கூறினார்.
பாதிக்கப்பட்ட கடைக்காரர்களின் எண்ணிக்கை குறித்து கடைத்தொகுதி தகவல் வெளியிடவில்லை.
இரவு 10.40 மணி அளவில் திரையரங்கிலிருந்து வெளியேறியபோது மழை பெய்வது போன்ற சத்தம் கேட்டதாகத் தமது மனைவி கூறியதாக 37 வயது திரு ஹெர்மன் டியோ தெரிவித்தார்.
முதல் மாடியில் உள்ள வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றபோது, கடைத்தொகுதியின் உட்கூரையிலிருந்து நீர் கசிந்துகொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த நீரிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அது மிகவும் அழுக்காக இருந்ததாகவும் திரு டியோ கூறினார்.
ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு நீர் கசிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பல கடைகளுக்கு முன் நீர் தேங்கி இருப்பதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
சம்பவம் நிகழ்ந்தபோது பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் திறந்திருந்த சில கடைகளில் மின்னணுவியல் பொருள்கள்மீது தண்ணீர் படாமல் இருக்க ஊழியர்கள் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் திரு டியோ கூறினார்.
தேங்கிக்கிடந்த நீரைக் கடைகளிலிருந்து வெளியாக்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.