பழுதடைந்த இதய வால்வுகளுக்குப் பதிலாக மாற்று வால்வுகளைப் பொருத்துதல், காது கேளாதோருக்கு உதவும் கருவிகளைப் பொருத்துதல், கண் புரை பாதிப்பைக் குணமாக்க உதவும் ஒட்டு வில்லைகளைப் பொருத்துதல், தேய்ந்துபோன கால் மூட்டுகளுக்கான சிகிச்சை போன்ற உடலியக்கக் கருவிகளைப் பொருத்தும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகம் செலவாகும்.
குறைந்த வருமானக் குடும்பத்தினர் இத்தகைய அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்ள அரசாங்கம் இனி கூடுதல் மானியம் வழங்கவிருக்கிறது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய அறுவை சிகிச்சைகளை அமைச்சின் ‘ஏசிஇ’ எனப்படும் பராமரிப்புச் செயல்திறனுக்கான அமைப்பு மதிப்பீடு செய்ததாகக் கூறப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, ‘பி2’, ‘சி’ ஆகிய வார்டுகளில் உள்ள நோயாளிகளும் மருத்துவமனையில் இரவு தங்கத் தேவையிராத சிறிய அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட நோயாளிகளும், அனைத்து வகையான இயக்கக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சைகளுக்கும் இத்தகைய மானியத்துக்குத் தகுதி பெறுகின்றனர்.
இவர்களில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு 50 விழுக்காடு வரையிலான மானியம் அல்லது அதிகபட்சம் $1,000 வழங்கப்படுகிறது. நிரந்தரவாசிகளுக்கு 25 விழுக்காடு வரையிலான மானியம் அல்லது அதிகபட்சம் $500 வழங்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் அனைத்து வகை இயக்கக் கருவிகளும் மானியத்துக்குத் தகுதி பெறுவதால் தயாரிப்பாளர்கள் இவற்றின் விலைகளைக் குறைக்க இயலவில்லை.
புதிய மானியப் பட்டியலின்கீழ், அனைத்துக் கருவிகளும் இவ்வாறு தகுதிபெறமாட்டா. அதனால் அவற்றின் தயாரிப்பாளர்களிடம் விலை தொடர்பில் பேரம்பேச முடியும்.
புதிய மானியப் பட்டியலுக்கான முன்னோடித் திட்டத்தில் இதய நோயாளிகளுக்கான மூன்று வகை இயக்கக் கருவிகளுக்கும் காது கேளாதோருக்கான இயக்கக் கருவிக்கும் 25 விழுக்காடு வரையிலான விலைக் குறைப்பு கிடைத்தது. அதனால் 2017 முதல் 2022 வரை $8.3 மில்லியன் சேமிக்க முடிந்தது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுகாதாரப் பராமரிப்புக் கட்டண உயர்வில் நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்வது இந்தப் புதிய நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரின் மக்கள் தொகை விரைவாக மூப்படைந்துவரும் நிலையில் இங்கு அறுவை சிகிச்சை மூலம் இயக்கக் கருவிகளைப் பொருத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.