2023ல் அதிக பணவீக்கம் ஊதிய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியதால் ஊழியர்கள் அதன் பாதிப்பை உணர்ந்து வருகின்றனர்.
நவம்பர் 30ஆம் தேதி அன்று முன்னோட்ட ஊழியரணிப் புள்ளி விவரங்களை வெளியிட்ட மனிதவள அமைச்சு, ஆண்டு அடிப்படையில் வருமானம் ஈட்டுபவர்களில் கீழ்நிலையில் உள்ள இருபது விழுக்காடு சிங்கப்பூர்வாசிகளின் வருமானம் மூன்று விழுக்காடு வீழ்ச்சியடைந்தது என்றும் அதே சமயம் ஆண்டு அடிப்படையில் இடைநிலை வருமானம் 2.3 விழுக்காடு குறைந்தது என்றும் கூறியது.
சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கி சிங்கப்பூர்வாசிகள் என குறிப்பிடப்படுகிறது.
சிங்கப்பூர்வாசிகளில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கான வேலைவாய்ப்பு விகிதம் 2022ஆம் ஆண்டின் 67.5 விழுக்காடு உச்சத்திலிருந்து 66.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது என்று அமைச்சு குறிப்பிட்டது.
2023ல் தொழிலாளர் சந்தை தொடர்ந்து நெருக்கடியில் இருந்தது. நிபுணத்துவர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) மற்றும் அத்தகைய பணிகளில் இல்லாதவர்களுக்கு வேலையின்மை மற்றும் நீண்டகால வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக அதிகமான சிங்கப்பூர்வாசிகள் ஊழியரணியிலிருந்து விலகியிருந்ததால் வேலை வாய்ப்பு குறைந்ததாகவும் வேலை தேடுவதில் உள்ள சிரமங்களால் அல்ல என்றும் அமைச்சு கூறியது.
சிங்கப்பூர்வாசிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் தொழிலாளர் சந்தை பங்கேற்பு விகிதம் 2022ல் 70 விழுக்காட்டிலிருந்து 2023ல் 68.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து காலியாக உள்ள வேலையிடங்களின் எண்ணிக்கை குறைந்ததால் வேலையில்லாதவர்களின் வேலை வாய்ப்பு விகிதம் 2023 ஜூனில் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக கணிசமாக 1.94 விழுக்காட்டுக்கு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிஎம்இடி பிரிவில் இல்லாதவர்களுக்கு வேலையின்மை விகிதம் 2022ஆம் ஆண்டில் 4.4 விழுக்காட்டிலிருந்து 2023ல் 3.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது. அதே சமயத்தில் பிஎம்இடி பிரிவினருக்கு இதே காலகட்டத்தில் அது 2.6 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது என்று அமைச்சு சொன்னது.
பிஎம்இடி அல்லாதவர்களுக்கு நீண்டகால வேலையின்மை விகிதம் 0.7 விழுக்காட்டிலிருந்து 0.5 விழுக்காட்டுக்குச் சரிந்தது. இதுவே பிஎம்இடி பிரிவினருக்கு 2.6 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காட்டுக்கு குறைந்தது.
ஆனால், தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கான அறிகுறிகள் மேம்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு கூறியது.

