சிங்கப்பூருக்குள் கடந்த நவம்பர் மாதம் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவருக்கு டிசம்பர் 4ஆம் தேதி ஓராண்டு சிறையும் ஐந்து பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நூர்டின் எனப் பெயர் கொண்ட அந்த ஆடவர் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றது இது முதல் தடவை அல்ல. இவர் 2015ஆம் துஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குடிநுழைவு சட்ட மீறலில் ஈடுபட்டுள்ளார். நூர்டின் மீது குடிநுழைவு சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த இரண்டு குற்றச்சாட்டுகளின்மீது டிசம்பர் 4ஆம் தேதி அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை தேட வந்த நூர்டின் இந்தோனீசியாவின் பாத்தாமிலிருந்து வேகப் படகு ஒன்றை எடுத்து ஓட்டி தானா மேரா கடற்கரைப் பகுதியில் 20ஆம் தேதி பின்னிரவில் இறங்கினார்.
பின்னர் அங்கிருந்து மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் கால்நடையாகச் சென்றார் என்றும் நீதிமன்றம் அறிந்தது.
அவர் வந்த படகை கடலோரக் காவற்படையினர் கண்டனர் என்றும் அதைத் தொடர்ந்து தானா மேரா பகுதியில் தேடத் தொடங்கினர் என்றும் கூறப்படுகிறது. நூர்டின் நவம்பர் 20ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.