சிங்கப்பூரில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களில் மிகச் சிலரே ரத்த தானம் செய்ய முன்வருவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை 44 விழுக்காடு குறைந்திருப்பதாக அது குறிப்பிட்டது.
இந்த ஆண்டு (2023) ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில், ஏறக்குறைய 10,100 இளையர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தோரின் மொத்த எண்ணிக்கையில் 14 விழுக்காட்டினர் இளையர்கள் என்று கூறப்பட்டது.
இவ்வாறு ரத்த தானம் செய்ய முன்வரும் இளையர்களின் எண்ணிக்கை குறையும் போக்கு கவலையளிப்பதாக சங்கம் கூறியது. கடந்த ஐந்தாண்டுகளில் தானம் பெறும் ரத்தத்துக்கான தேவை நான்கு விழுக்காடு உயர்ந்திருக்கும் வேளையில் இந்தப் போக்கு கவலையளிப்பதாக அது குறிப்பிட்டது.
நாட்டில் மூப்படையும் மக்கள்தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், ரத்தத்திற்கான தேவையும் உயரக்கூடும் என்பதை செஞ்சிலுவைச் சங்கம் சுட்டியது. முதியோர் சுகாதாரப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1.8 விழுக்காட்டினரே, வழக்கமான இடைவெளியில் ரத்த தானம் செய்வதாக சங்கம் கூறியது.
அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், ரத்தம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை, விபத்துகளில் காயமடைந்தோர்க்கான தேவை என, ஒரு மணி நேரத்திற்கு மொத்தம் 15 யூனிட்டுகள் ரத்தம் தேவைப்படுகிறது.
நோயாளிகளின் பல்வேறு தேவைகளை ஈடுகட்டுவதற்காக, அன்றாடம் 400 யூனிட்டுகள் ரத்தத்தைச் சேகரிக்க வேண்டியிருப்பதாக சங்கம் சொன்னது.
ரத்த வங்கிகளில் கையிருப்பு குறைந்தால் தள்ளிப்போடக்கூடிய அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும்.