புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் ‘நட்பார்ந்த சாலைகள்’ திட்டப் பணிகள் தொடக்கம்

புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் ‘நட்பார்ந்த சாலைகள்’ திட்டப் பணிகள் தொடக்கம்

2 mins read
4c2d764c-9573-47a5-a166-5328fe28a33b
நட்பார்ந்த சாலைகள் திட்டத்தின்கீழ், புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் புதிய அடையாளக் குறியீடுகளுடன்கூடிய, சாலையைக் கடக்கும் பகுதிகள் அமைக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வட்டாரத்தில், நட்பார்ந்த சாலைகள் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன.

நடந்து செல்வோர்க்கும் சைக்கிளோட்டிகளுக்கும் பொருத்தமான வகையில் சில சாலைகளை, முக்கிய வசதிகளுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாகனமோட்டிகளுக்கு, அவர்கள் நட்பார்ந்த வீதியில் நுழைவதைச் சொல்லும் அடையாளக் குறியீடுகள் புதிதாக அமைக்கப்படும்.

அந்தச் சாலையைக் கடக்கும் முதியோர், குழந்தைகள் குறித்து வாகனமோட்டிகள் கவனத்துடன் செயல்பட அந்தக் குறியீடுகள் உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் திட்டத்திற்கான நிலந்திருத்தும் பணி டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், ஆணையம் இந்தத் தகவல்களை வெளியிட்டது.

டிசம்பர் மாதத்திலிருந்து இத்தகைய நட்பார்ந்த சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள், படிப்படியாக அங் மோ கியோ, தெம்பனிஸ், தோ பாயோ, வெஸ்ட் கோஸ்ட் ஆகிய வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2025ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நகர்ப்பகுதிக்குமான சிறப்புத் தேவைகள், நட்பார்ந்த சாலை உருமாற்றத்திற்குத் தேர்தெடுக்கப்பட்டுள்ள சாலையின் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப அங்கு பணிகள் மேற்கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டாக, அகலமான நடைபாதைகள், சைக்கிளோட்டிகளுக்கான தனித் தடங்கள் போன்றவை இடம்பெறும். பரபரப்பான போக்குவரத்தைக் குறைத்து, நடந்துசெல்வோர் சாலையைக் கடக்க உதவும் வகையிலான ஏற்பாடு செய்யப்படும்.

சாலையைக் கடப்பதற்கான ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை விளக்கு, குறைவான இடைவெளியிலும் கூடுதல் நேரத்திற்கும் ஒளிரும் என்று கூறப்பட்டது.

சாலையைக் கடக்கும் தடத்தின் நீளம், மெதுவான நடை வேகம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை விளக்கு ஒளிரும் நேரம் கூட்டப்படும் என்று ஆணையம் சொல்லிற்று.

நட்பார்ந்த சாலைகளில் ‘சிரிக்கும் சூரியன்’ குறியீடு புதிதாக அமைக்கப்படும். சாலையில் நுழையும் இடத்திலும், பாதசாரிகள் கடக்கும் இடத்திற்கு முன்பாகவும் அந்தக் குறியீடு இடப்படும்.

அதைப் பார்த்ததும் வாகனமோட்டிகள் வேகத்தைக் குறைத்து, முதியோர் அல்லது குழந்தைகள் சாலையைக் கடக்கின்றனரா என்று கவனிக்க முடியும்.

மேலும், சாலையின் மேற்பரப்பில் பச்சை வண்ணத்தில் வேகக் கட்டுப்பாடு குறித்த குறியீடுகள் இடப்படும்.

நடந்து செல்வோரும் சைக்கிளோட்டிகளும் நகர்ப்புறத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு அன்றாடம் மேலும் பாதுகாப்பாகவும் மேலும் எளிதாகவும் சென்றுதிரும்ப உதவுவது நட்பார்ந்த சாலைகள் திட்டத்தின் நோக்கம்.

நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் சீ ஹொங் டாட், ஐந்து நகரங்களில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னோடித் திட்டம் பின்னர் அனைத்து நகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்