பருவநிலைக்கு ஏற்ற குடும்பங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 225 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை 2024ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பற்றுச்சீட்டுகள் பயன்படுத்த கொடுத்த கால அவகாசம் இம்மாத இறுதியுடன் முடியவிருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தகவல் வெளியிட்டுள்ளார்.
திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளை இதுவரை 136,000க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஒன்று முதல் மூன்று அறைகளைக் கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. குறைந்த மின்சாரம், தண்ணீரைக் குறைவாக எடுக்கும் சாதனங்கள் வாங்க அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தமுடியும்.
மின்சாரம் குறைவாக எடுக்கும் குளிர்பதனப்பெட்டி வாங்க 150 வெள்ளி பற்றுச்சீட்டு, ‘எல்இடி’ விளக்குகள் வாங்க 25 வெள்ளி பற்றுச்சீட்டு, தண்ணீரைக் குறைவாக வெளியிட உதவும் குளியல் குழாய்கள் வாங்க 50 வெள்ளி பற்றுச்சீட்டு என மூன்று பகுதிகளாக அந்த 225 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பருவநிலைக்கு ஏற்ற குடும்பங்கள் திட்டம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
குறைந்த மின்சாரம், தண்ணீரைக் குறைவாக எடுக்கும் சாதனங்கள் வாங்குவதன் மூலம் குடும்பங்களால் மின்சாரம் மற்றும் தண்ணீர் செலவுகளை குறைக்க முடியும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு சுட்டிக்காட்டியது.