சிங்கப்பூரில் 10ல் எட்டு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நிலவரம் வலுவிழந்திருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டபோதும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கப் பல நிறுவனங்கள் திட்டுமிட்டுள்ளன.
எனினும், சென்ற ஆண்டு அதிகமான தொகையை போனசாக வழங்கத் தயாராய் இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுடின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மேன்பவர்குரூப் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிறுவனம் அண்மையில் நடத்திய காலாண்டுக்கான வேலைச் சூழல் கருத்தாய்வில் இந்த விவரம் தெரியவந்தது.
கருத்தாய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (டிச. 12) வெளியிடப்பட்டன.
525 நிறுவனங்களைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 84 விழுக்காட்டு நிறுவனங்கள் குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தன.
சென்ற ஆண்டு இந்த விகிதம் 87 விழுக்காடாகப் பதிவானது.
நிதி, சொத்துச் சந்தைத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் கூடுதல் தொகையை போனசாக வழங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துறைகளில் 11 விழுக்காட்டு நிறுவனங்கள் குறைந்தது ஒன்றரை மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் திட்டமிடுகின்றன. இதர எட்டு துறைகளில் சராசரியாக ஏழு விழுக்காட்டுக்குக் குறைவான நிறுவனங்கள் அவ்வாறு செய்யத் தயாராய் இருப்பது கருத்தாய்வில் தெரிய வந்தது.
போக்குவரத்து, தளவாட, வாகனத் துறையில் 97 விழுக்காட்டு நிறுவனங்கள் குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தன. அதற்கு அடுத்த நிலையில் எரிசக்தி, பயனீட்டுத் துறையில் 96 விழுக்காட்டு நிறுவனங்கள் அவ்வாறு செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தன.
பொதுவாக பெரிய நிறுவனங்கள் ஒரு மாத சம்பளத்துக்கு மேலான தொகையை போனசாக வழங்கும் வாய்ப்புகள் அதிகம்.