தனது கணவரைக் கத்தியால் குத்திய 50 வயது பெண்மணி ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் முன்யோசனையின்றி செய்த இந்தக் காரியத்தால் கணவருக்கு மரணம் விளைவித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
62 வயதான முகமது அலி சாபான், டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11:50 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 4 இன் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் காயமடைந்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவரது மனைவி பனியா ஷாப் தனது கணவருடன் சண்டை போட்டதன் விளைவாக வெள்ளி நிற மடிப்புக் கத்தியால் அவரைக் குத்தி காயப்படுத்தினார்.
டிசம்பர் 13ஆம் தேதியில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார் என்றும் மறுநாள் இறந்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணையின்போது பனியா தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாக தெரிவித்தார். ஆனாலும், கணவரை தாம் கொல்லவில்லை என்றும் அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.
குற்றச்செயல் தொடர்பான சாட்சியங்களைக் கைப்பற்றவும் குற்றம் எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறியவும் சம்பவ இடத்துக்கு பனியாவை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாக காவல்துறை ஆய்வாளர் கூறினார். அதற்காக அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கு சந்தேக நபர் விசாரணை அதிகாரியிடம் தனது வாக்குமூலங்களை வழங்கிவிட்டதாகவும் தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த பிணையில் தான் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை காவல் துறை அதிகாரி நிராகரித்ததாகக் கூறினார்.
பனியாவை ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி பிரெண்டா டான் உத்தரவிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் , அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.