நான்கில் ஒரு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் வேலையிடத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக 2022ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
முத்தரப்புப் பங்காளித்துவப் பணிக்குழு மார்ச் 13 தேதி நடத்திய ஆய்வில் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.
அவர்களில் 39 விழுக்காட்டினர் பாலியல் தொடர்பாக விடுக்கப்படும் கோரிக்கைகள், கருத்துகளைத் துன்புறுத்தலாகக் கருதவில்லை என்று ஆய்வு தெரிவித்தது.
பணிக்குழு வெளியிட்ட அறிக்கையை அடுத்து, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் துன்புறுத்தல் சம்பவங்களிலிருந்து பாதுகாக்க கட்டமைப்பு ஒன்றைப் பணிக்குழு டிசம்பர் 13ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
எத்தகைய செயல்களும் கருத்துகளும் துன்புறுத்தல், தொல்லை விளைவித்தலாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதைக் கட்டமைப்பு தெளிவாக எடுத்துரைக்கிறது.
அத்துடன், நோயாளிகள் அல்லது அவர்களைக் காண வருவோர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தொல்லை விளைவித்தால் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கூ டெக் புவாட் மருத்துமனையில் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரியும் திருவாட்டி மரிசோல் ஸபெலேரோ வில்லாபிரில் தமக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தமது ஆடைகளைக் கழற்றிடப்போவதாகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் தம்மை மிரட்டியதாக அவர் கூறினார்.
அந்த நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அவர் சொந்தமாகக் கழிவறைக்குப் போக முடியாது என்றும் திருவாட்டி வில்லாபிரில் கூறினார்.
எனவே, அவரைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.
இது அந்த நோயாளிக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் சினங்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நோயாளி தம்மை மிரட்டியதும் சக ஊழியர் ஒருவர் குறுக்கிட்டு , அவ்வாறு கூறக்கூடாது என்று கடிந்துகொண்டதாக திருவாட்டி வில்லாபிரில் கூறினார்.
பிறகு, மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக திருவாட்டி வில்லாபிரில் கூறினார்.
சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அந்த நோயாளிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சக ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் வழங்கிய ஆதரவு அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர தமக்கு உதவியதாக திருவாட்டி வில்லாபிரில் கூறினார்.
துன்புறுத்தப்பட்டால் அதுகுறித்து சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் புகார் செய்ய வேண்டும் என்றும் புதிய கட்டமைப்பு அதற்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் திருவாட்டி வில்லாபிரில் நம்பிக்கை தெரிவித்தார்.