காயம் விளைவிவிக்கக்கூடிய கருவிகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலனவை கவண்வில், ‘நக்கல்டஸ்டர்’ போன்றவை அடங்கும் என்று தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இதுபோன்ற 77 கருவிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட சரக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய கருவிகளின் எண்ணிக்கையைவிட இது 67 விழுக்காடு அதிகம்.
காயம் விளைவிக்கக்கூடிய கருவிகளில் அரிவாள், மிளகுநீர் தெளிப்பான்கள், ‘நுன்சாக்குஸ்’ போன்றவையும் அடங்கும்.
இந்தக் கவலைக்குரிய போக்கைக் கையாள, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் விவரித்துள்ளன.
சரக்கு சிங்கப்பூரை அடைவதற்கு முன்பு, சந்தேகத்துக்குரிய சரக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.
சாங்கி விமான சரக்கு மையத்தில் அனைத்து சரக்கு வாகனங்களும் ‘ஸ்கேன்’ செய்யப்படுகின்றன.
இதன்மூலம் வாகனங்களுக்குள் இருக்கும் சரக்குகள் ஆராயப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட பொருள்களுடன் ஒத்துப்போகாத வடிவங்கள் காணப்பட்டால் கூடுதல் விரிவான சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்வர். இதற்கு ‘எக்ஸ்ரே’ எனப்படும் ஊடுகதிர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
பொருள்கள்மீது எவ்வளவுதான் உறைகள் போடப்பட்டிருந்தாலும் இந்த இயந்திரம் அதன் வடிவத்தையும் எடையையும் தெளிவாகக் காட்டும்.
உலோகம் போன்ற உயர் எடை கொண்ட பொருள்களை அந்த இயந்திரம் நீல நிறமாகக் காட்டும்.
உணவுப் பொருள்கள் ஆரஞ்சு நிறத்திலும் கண்ணாடி அல்லது நெகிழி போன்ற கலவைப் பொருள்கள் பச்சை நிறத்திலும் காட்டப்படும்.
காயம் விளைவிக்கக்கூடிய நக்கல்டஸ்டர், தடிகள் போன்றவை உலோகங்களால் தயாரிக்கப்படுவதால் அவை கூடுதல் எடை கொண்டவை என்றும் ஊடுகதிர் இயந்திரத்தில் அவை நீல நிறமாகத் தெரியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிபொருள்களைக் கொண்ட கருவிகளைக் கண்டுபிடிக்கவும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் வேறொரு சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பொட்டலத்தின் மேற்பரப்பிலிருந்து மாதிரியைச் சேகரித்து அதை அந்தச் சாதனத்துக்குள் அதிகாரிகள் செலுத்துவர். அதன்மூலம் பொட்டலத்துக்குள் வெடிபொருள் இருக்கிறதா என்று தெரிந்துவிடும்.
போதைப்பொருளுக்கும் இதே உத்தி கையாளப்படுகிறது.
தடை செய்யப்பட்ட கருவிகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவோரும் பொது இடங்களில் அல்லது வீடு போன்ற தனிப்பட்ட இடங்களில் அவற்றை வைத்திருப்போரும் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய ஆயுதங்களை வைத்திருப்போருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.