உதவி தேவைப்படும் சிறுநீரக நோயாளிகளுக்காக ஃபுட்சால் எனும் ஐவரைக் கொண்ட குழுக்கள் இடம்பெறும் காற்பந்துப் போட்டியின் மூலம் 300,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.
சிறுநீரக சிகிச்சை அறநிறுவனம் (கேடிஎஃப்) இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தது. சனிக்கிழமையன்று நடைபெற்ற ஃபுட்சால் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட தொகை உதவி தேவைப்படும் சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்கும் அவர்களுக்குத் தரமான பராமரிப்பு வழங்கவும் பயன்படுத்தப்படும்.
மேலும், சிறுநீரக சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொகை உபயோகிக்கப்படும்.
“கொட் டு கோல் 2023: ஸ்கோரிங் ஏஸ் ஒன் கம்யூனிட்டி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஃபுட்சால் போட்டி ஹவ்காங் ஸ்திரீட் 21ல் இருக்கும் ‘கிக் ஆஃப்! @ கோவன்’ ஃபுட்சால் விளையாட்டுக் கூடத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை இப்போட்டி நடந்தது.
“வருங்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுப்பதோடு சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ‘கொட் டு கோல் 2023’ ஒரு முக்கிய படிக்கல்லாக விளங்குகிறது,” என்றார் சிறுநீரக சிகிச்சை அறநிறுவனத்தின் நிர்வாகக் குழு இயக்குநர் உவென்ட்செர்ன் லோ.
நன்கொடையாளர்கள் உதவித் தொகையைத் திரட்டினர். டோட்டி போர்டின் அமைப்பின் ஆதரவுடன் ஒடிசிரெ எனும் மறுகாப்புறுதி (ரீஇன்ஷியூரர்) நிறுவனம் போட்டிக்கான செலவை ஏற்றுக்கொண்டது.
சிறுநீரக சிகிச்சை அறநிறுவனம் 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்கீழ் பிஷான், கிம் மோ, சைனாடவுன், அட்மிரல்டி ஆகிய பகுதிகளில் நான்கு சிறுநீரக சிகிச்சை நிலையங்களில் நோயாளிகள் கவனிக்கப்படுகின்றனர்.
10 ஆண்டுகளில் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 42 விழுக்காடு அதிகரித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அக்டோபர் மாதம் தெரிவித்தது. 2011ஆம் ஆண்டில் 1,587ஆக இருந்த அத்தகையோரின் எண்ணிக்கை 2020ல் 2,249ஆக அதிகரித்ததென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.