பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் அடுத்த ஆண்டிறுதிக்குள் சைக்கிளோட்டிகளுக்கென ஒரு பகுதி உருவாக்கப்படவுள்ளது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அந்த சைக்கிளோட்டப் பகுதியை அமைத்து வருகிறது. பொங்கோல் நிலையம் அமைந்துள்ள வடக்கு-கிழக்கு பெருவிரைவு ரயில் பாதை, அந்நிறுவனத்தின்கீழ் உள்ளது.
சைக்கிளோட்டிகள் தங்களின் சைக்கிள்களுக்குத் தேவையான கருவிகளைப் பெறவும் உணவருந்தவும் அப்பகுதி வகைசெய்யும். மேலும், சைக்கிளோட்டிகள் அப்பகுதியில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளலாம்.
பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையம் இருக்கும் வட்டாரத்தில் வசிப்போரின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தக் கூடுதலானோரை ஊக்குவிக்கவும் புதிய சைக்கிளோட்டப் பகுதி அமைக்கப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.
‘பைக் வில்லேஜ்’ என்று தற்போதைக்கு அழைக்கப்படும் சைக்கிளோட்டப் பகுதியை அமைப்பதற்கு அனுமதி பெற எஸ்பிஎஸ் டிரான்சிட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பூங்கா இணைப்பை (பார்க் கனெக்டர்) பல சைக்கிளோட்டிகள் விரும்புவதைத் தாங்கள் அறிவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம் கூறினார். புதன்கிழமைன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்தார்.
அதனால் உணவு விற்கும் வாகனங்கள், சைக்கிள் பாகங்களை விற்கும் கடைகள் போன்றவை இருக்கும் பகுதியை அமைத்துத் தர எஸ்பிஎஸ் டிரான்சிட் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பொதுப் பேருந்துச் சேவை நிறுவனமான அது, டௌன்டவுன் மற்றும் வடக்கு-கிழக்கு பெருவிரைவு ரயில் சேவைகள், செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவை ஆகியவற்றையும் இயக்குகிறது.
‘எனிவீல்’ எனும் சைக்கிள் பகிர்வு நிறுவனத்துடனும் எஸ்பிஎஸ் டிரான்சிட் இணைந்து செயல்படுகிறது. அதன்கீழ் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பகிர்வு சைக்கிள்கள் குறித்த தகவல்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் செயலியில் தெரிந்துகொள்ள முடியும்.
2024ஆம் ஆண்டு தொடக்கத்துக்குள் பயனாளர்கள் அச்செயலியைக் கொண்டு பகிர்வு சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
இவற்றோடு, பகிர்வுக் கார் நிறுவனம் ஒன்றுடனும் எஸ்பிஎஸ் டிரான்சிட் இணைந்து செயல்பட்டு வருகிறது. பகிர்வுக் கார்களைத் தங்களின் வளாகங்களில் நிறுத்த தங்களின் ஊழியர்களுக்கு அனுமதி வழங்குமாறு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களை ஊக்குவிப்பது அம்முயற்சியின் நோக்கம்.
அந்நிறுவனங்களின் ஊழியர்களைத் தனியார் கார்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பகிர்வுக் கார் சேவைகளைப் பயன்படுத்த வைப்பது இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.