எகிப்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு அல் சிசி தொடர்ந்து மூன்றாவது முறையாக எகிப்தின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2030ஆம் ஆண்டு வரை எகிப்தை ஆட்சிபுரிவார்.
திங்கட்கிழமை எகிப்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது, அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிபர் தர்மன் திரு அல்சிசிக்கு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பினார்.
“மத்திய கிழக்கு வட்டாரத்தில் தற்போது நடந்து வரும் பூசல் நேரத்தில் பெரிய அளவில் மக்கள் வாக்குகளை பெற்று எகிப்தில் ஆட்சி அமைத்தது மிக முக்கியமானது. காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் அங்கு அமைதி நிலவவும் எகிப்தின் பங்கு இன்றியமையாத ஒன்று,” என்றார் திரு தர்மன்.
சிங்கப்பூரும் எகிப்தும் நீண்ட காலமாக அரசியல், பொருளியல், மக்கள் உறவு என நல்ல பங்காளித்துவ நாடுகளாக இருப்பதையும் திரு தர்மன் கடிதத்தில் குறிப்பிட்டார்.
சுற்றுப் பயணம், சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்துள்ள புரிந்துணர்வுகளையும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
திரு அல் சிசி 2014ஆம் ஆண்டு முதல்முறையாக எகிப்து அதிபராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டும் ஆட்சியைப் பிடித்தார்.