எட்டு விழுக்காடாக இருக்கும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படவுள்ளது.
இந்நிலையில், அந்த ஒரு விழுக்காட்டுப்புள்ளி ஜிஎஸ்டி உயர்வால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில், அந்த உயர்வைத் தானே ஏற்றுக்கொள்ளப்போவதாக இக்கியா சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், தனது தயாரிப்புகளின் விலையில் உயர்வு இருக்காது என்றும் இப்போதைய விலையே தொடரும் என்றும் இக்கியா கூறியுள்ளது.
விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், தனது பொருள்கள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த நடைமுறை நடப்பில் இருக்கும் என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று இக்கியா பேச்சாளர் கூறினார்.
முன்னதாக, இவ்வாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டபோதும், அந்த ஒரு விழுக்காட்டுப் புள்ளி வரி உயர்வை இக்கியாவே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தனது பொருள்களில் சிலவற்றின் விலையையும் அது குறைத்துள்ளது.
இக்கியா நிறுவனத்தைப்போல, ஜிஎஸ்டி உயர்வு வாடிக்கையாளர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பேரங்காடிக் குழுமங்களான ஃபேர்பிரைசும் ஷெங் சியோங்கும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளன.