மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை தீவெங்கும் சோதனை நடவடிக்கை நடத்தியது.
இதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதை அடுத்து, விழாக் காலங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 22ஆம் தேதியன்று ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ரிபப்ளிக் அவென்யூ அருகில் போக்குவரத்துத் தடுப்பு போடப்பட்டது.
இரவு சுமார் 11.45 மணியிலிருந்து அவ்வழியாகச் சென்ற சில வாகன ஓட்டுநர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உள்ளதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு சுவாச சோதனை செய்யப்பட்டது.
இந்தச் சோதனைக்கு உட்பட்டவர்களில் நடுத்தர வயது ஆடவர்களும் இளம் ஓட்டுநர்களும் அடங்குவர். பல்வேறு போக்குவரத்துத் தடுப்புகளில் கிட்டத்தட்ட 56 ஓட்டுநர்களுக்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
பத்து ஆடவர்கள், ஏழு பெண்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியது சோதனை மூலம் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 வயதுக்கும் 70 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
சுவாச சோதனை செய்துகொள்ள மறுத்த 35 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் ஆகக் குறைவாக (146 சம்பவங்கள்) இருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 155ஆகவும் கடந்த ஆண்டில் 170ஆகவும் அதிகரித்தது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் 13 பேர் மாண்டனர். 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8ஆகக் குறைந்தது. 2022ஆம் ஆண்டில் அது 10ஆக அதிகரித்தது.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இரவு விடுதிகள் மூடப்பட்டன. அதன் விளைவாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தக் குற்றத்துக்காக 2021ஆம் ஆண்டில் 1,453 கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,685ஆக அதிகரித்தது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தின்பேரில் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டு சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படலாம்.