எஸ்ஸோ சிங்கப்பூர், ஷெல் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்கள் டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குத் தற்காலிகமாக மூடப்படும்.
ஜனவரி 1, 2024 முதல் சிங்கப்பூரில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஒன்பது விழுக்காட்டிற்கு உயர்த்தப்படுவதால் இரு நிறுவனங்களும் அதற்கேற்பத் தங்கள் கணினிக் கட்டமைப்பில் திருத்தம் செய்துகொள்ள ஏதுவாக அவ்வாறு திட்டமிட்டுள்ளன.
எஸ்ஸோ சிங்கப்பூர் அதன் பெட்ரோல் நிலையங்களை இரு பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ஒன்று மூடப்பட்டிருக்கும்போது மற்ற பிரிவின்கீழ் வரும் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
முதலாவதாக, 2023 டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.30 மணியிலிருந்து 2024 ஜனவரி காலை 12.30 மணி வரை ஒரு பிரிவின்கீழ் வரும் 29 நிலையங்கள் செயல்படும் என்று கூறியுள்ளது. பிடோக் சவுத், ஜூரோங் வெஸ்ட், உட்லண்ட்ஸ் அவென்யூ 1 ஆகியவற்றில் அமைந்துள்ள நிலையங்கள் அவற்றில் அடங்கும்.
அடுத்ததாக, 2024 ஜனவரி காலை 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை மற்றொரு பிரிவின்கீழ் வரும் 30 நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று எஸ்ஸோ சிங்கப்பூர் கூறியது. ஈஸ்ட் கோஸ்ட், பைனியர், ஈசூன் ஆகிய பகுதிகளில் உள்ள நிலையங்கள் அவற்றில் அடங்கும்.
டிசம்பர் 29ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அது அவ்வாறு பதிவிட்டது.
அனைத்து எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களிலும் அருகில் உள்ள எஸ்ஸோ நிலையங்கள் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும் என்று அது சொல்லிற்று.
முன்னதாக ஷெல் நிறுவனம், அதன் பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.30 மணியிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி காலை 12.20 மணி வரை மூடப்படும் என்று டிசம்பர் 27ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
மின்வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் ‘ஷெல் ரீசார்ஜ்’ தொடர்ந்து செயல்படும் என்றும் மின்வாகனங்களை ஓட்டுவோர் வழக்கம்போல அவற்றை மின்னூட்டம் செய்துகொள்ளலாம் என்றும் அது அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பொருள், சேவை வரி, 8 விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டு 9 விழுக்காட்டிற்கு உயர்த்தப்படும். முன்னதாக 2023ஆம் ஆண்டு அது 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டது.