புக்கிட் தீமா சிக்ஸ்த் அவென்யூ வீடு ஒன்றின் பொருள் வைப்பறையில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 30) தீப்பற்றியதாக ‘ஸ்டோம்ப்’ இணையச்செய்தியில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
168 சிக்ஸ்த் அவென்யூவின் ஐந்தாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் பிற்பகல் தீப்பிடித்ததாக ஜென் என்னும் பெயருடையவர் ‘ஸ்டோம்ப்’ தளத்திடம் கூறினார்.
அந்த கொண்டோமினிய வீட்டில் தீ எரிவதையும் வீட்டுக்கு வெளியே புகை பரவுவதையும் காட்டும் காணொளி ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.15 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ‘ஸ்டோம்ப்’ தளத்திடம் தெரிவித்தது.
பொருள் வைப்பறையில் இருந்தவற்றில் எரிந்த தீயை அந்தப் படையினர் அணைத்தனர்.
காவல்துறையும் கொண்டோமினிய நிர்வாகமும் அந்த புளோக்கில் இருந்த ஏறக்குறைய 40 குடியிருப்பாளர்களை வெளியேற்றின.
புகையை சுவாசித்ததால் இருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அவ்விருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

