மோசமான நிலநடுக்கத்தை சந்தித்த ஜப்பானுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தையும் அதன் சுற்று வட்டாரங்களையும் உலுக்கியது. குறைந்தது 84 பேர் மாண்டுவிட்டனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் சேதமும் தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில் திரு லீ வருத்தம் தெரிவித்தார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
“இந்தப் பேரிடரில் தங்களின் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் பிரதமர் லீ. நிலநடுக்கத்தால் காயமடைந்தோர் விரைவில் குணமடைய தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
“இந்த சவாலான காலகட்டத்தில் நீங்களும் ஜப்பானிய மக்களும் எங்கள் நினைவில் இருக்கிறீர்கள்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.