சிங்கப்பூர் சார்ந்த நிறுவனங்கள் தமிழக அரசுடன் $5 பில்லியன் (ரூ.31,000 கோடி) மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன.
சென்னையில் ஞாயிறு, திங்கள் (ஜனவரி 7, 8) இரு நாள்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிறு காலை தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.
மாநாட்டின் பங்காளித்துவ நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
மாநாட்டில் S$5 பில்லியன் திட்டமிட்ட முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் கைடன்ஸ்டிஎன் எனும் தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்புக்கும் இடையே கையெழுத்தாகின என்று வர்த்தக தொழில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
நீடித்த நிலைத்தன்மை, உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவதன் மூலம் தமிழ்நாட்டுடன் சிங்கப்பூர் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் நீடித்தநிலைத்தன்மை, உள்கட்டமைப்பு போன்ற உயர் வளர்ச்சித் துறைகளைச் சார்ந்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தொழில்நுட்பம், திறன்களில் ஒத்துழைப்பும் உடன்பாடு கண்டன என்று அறிக்கை குறிப்பிட்டது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மின்னிலக்கப் பொருளியலில் வேகமாக வளர்ந்துவரும் வாய்ப்புகளைக் கைப்பற்ற கேபிடலேண்ட் சென்னையில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது.
தொழில்துறை அளவிலான துப்புரவு இயந்திர மனிதக் கருவிகளை வடிவமைத்துத் தயாரிக்கும் லயன்ஸ்போட், தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் பொறியியல், இயந்திர மனிதக் கருவித் திறன் மேம்பாட்டில் இணைந்து செயல்படவுள்ளது. பயிற்சி ஆய்வகங்கள் வன்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் படிப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆகியன அச்செயல்பாட்டில் அடங்கும்.
வெளியுறவு அமைச்சு, வரத்தக, தொழில் அமைச்சு அதிகாரிகள், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு (என்டர்பிரைஸ்எஸ்ஜி) ஆகியவற்றின் அதிகாரிகள், சிங்கப்பூர் தொழில் சம்மேளனம், சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபை மற்றும் தொழில் துறைகளைச் சேர்ந்த 60 வணிக பிரதிநிதிகளை உள்ளடக்கிய பேராளர் குழு மாநாட்டில் பங்கேற்கிறது. இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தலைமையில் அக்குழு சென்னை சென்றுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனங்களைக் காட்சிப்படுத்தும் சிங்கப்பூர் அரங்கை ‘என்டர்பிரைஸ்எஸ்ஜி’ ஆதரவுடன் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் அமைத்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகத்தின் அவற்றின் ஆழத்தையும் அகலத்தையும் உத்திபூர்வமாக வளர்த்து வருவதை அண்மைய பங்காளித்துவ முயற்சிகளும், அவை தொடர்பான முதலீடுகளும் காட்டுகின்றன. இது தமிழகத்தின் வலுவான வாய்ப்புகளுக்கும் மாநிலத்தின் முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகளுக்கும் சான்றாகும் என்று என்டர்பிரைஸ்எஸ்ஜியின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு டான் சூன் கிம் கூறினார்.
சந்தைக்குள் நுழைய ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவை ஆழப்படுத்தவும், 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலாக வேண்டும் என்ற தமிழகத்தின் இலக்குடன் இணைந்து வாய்ப்புகளைப் பெற உதவவும் என்டர்பிரைஸ்எஸ்ஜி கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அமர்வில் சிங்கப்பூர் தூதர் வோங் தொடக்க உரை நிகழ்த்தினார்.
நம்பிக்கையளிக்கும் மறுபயனீட்டு எரிசக்தி ஏற்றுமதி குறித்து வாய்ப்புகளை ஆராய்வதில் சிங்கப்பூர் - தமிழ்நாட்டின் பங்காளித்துவ சாத்தியங்களை அவர் குறிப்பிட்டார்.
செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ், கேபிடலேண்ட் இன்வெஸ்ட்மென்ட், ப்ளூ பிளானட்டின் கியுயுபிஇ(கியுப்) ரினூவபள்ஸ், என்வைரன்சென்ஸ் போன்ற முன்னணி சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்ற, அதிக பசுமையான எதிர்காலத்துக்கான பங்காளித்துவமும் ஒத்துழைப்பும் என்ற தலைப்பிலான அமர்வும் இடம்பெற்றது.
சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பண்பாட்டு, வரலாற்றுத் தொடர்புகளின் அடிப்படையில் தென்னிந்தியாவில் சிங்கப்பூர் நிறுவனங்கள் நாடும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மகாராஷ்டிராவை அடுத்து, இரண்டாவது மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாடு வழங்குகிறது. 72 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 354 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் சார்ந்த நான்கு நிறுவனங்கள் 4,800 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு மே மாத சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அவரது பயணத்தின்போது,சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட ஹை-பி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 312 கோடி முதலீட்டில் மின்னியல் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.