தேசியப் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு முக்கிய நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளை சோதனையிட அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பொருந்தும். அனைத்து முதலீடுகளையும் சரிசமமாகக் கருதும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், குறிப்பிடத்தக்க முதலீடுகள் மறுஆய்வுச் சட்டத்தின்கீழ் முக்கியமாகக் கருதக்கூடிய நிறுவனங்களை அணுகியிருப்பதாகத் தெரிவித்தார்.
“அதாவது, உங்களுடைய நிறுவனம் அணுகப்படாமல் இருந்தால் அத்தகைய நிறுவனங்கள் தற்போது சேர்க்கப்படவில்லை என்று அர்த்தம்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
சட்டம் அமலுக்கு வரும்போது முக்கிய நிறுவனங்களின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்படும்.
அடுத்த சில மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய திரு கான், உலகம் சிக்கல் நிறைந்ததாக மாறி வருவதாலும் நிச்சயமற்ற, சவால்மிக்க பொருளியல் சூழல் நிலவுவதாலும் இத்தகைய சட்டம் சிங்கப்பூருக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
ராணுவ சச்சரவுகளால் எரிசக்தி, உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டதை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
புவி அரசியல் பதற்றத்தால் தன்னைப்பேணித்தனம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
“சிங்கப்பூர் திறந்த பொருளியலைக் கொண்டிருப்பதால் முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் மற்றும் உரிமை மூலமாக நாட்டின் நலன்கள் கீழறுக்கப்படலாம்,” என்றார் அமைச்சர்.
“நட்புணர்வுடன் முதலீடுகளை வரவேற்கும் வகையில் திறந்த பொருளியலை உறுதி செய்யும் அதே சமயத்தில் முக்கிய நிறுவனங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை பாதுகாக்க சட்டம் கவனமாக இயற்றப்பட்டுள்ளது என்று திரு கான் மேலும் கூறினார்.