சிங்கப்பூர் துறைமுகம், சென்ற ஆண்டு சாதனை அளவாக 39.01 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டதாக போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டு அது 37.29 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது. 2021ல் அந்த எண்ணிக்கை 37.57 மில்லியனாகப் பதிவானது.
ஒட்டுமொத்தத்தில் சிங்கப்பூர் முனையங்கள், சென்ற ஆண்டு 591.7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டன. கொவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன் 2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 626.5 மில்லியன் டன்னாக இருந்தது.
பான் பசிபிக் ஹோட்டலில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனப் புத்தாண்டு உரையாடல் நிகழ்ச்சியில் திரு சீ உரையாற்றினார்.
வரலாறு காணாத அளவில் சென்ற ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு மொத்தம் 3 பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் வருகை தந்ததாகத் தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
கப்பல்களின் சரக்கு அறை மட்டுமன்றி இதர பகுதிகளின் மொத்த எடையையும் சேர்த்து இந்த எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் 51.82 மில்லியன் டன் எடையுள்ள எரிபொருள், கப்பல்களுக்கு நிரப்பப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சிங்கப்பூரின் கடல்துறை கரிம நீக்க முயற்சிகளின் ஓர் அங்கமாக, கப்பல்களுக்கு இயற்கை எரிவாயு கலந்த எரிபொருளின் விற்பனை 2023ல் 520,000 டன்னாக அதிகரித்தது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்குக்குமேல் அதிகம்.
ஆணையம் மேற்பார்வையிடும் முக்கிய கடல்துறை நிறுவனங்களின் மொத்த வர்த்தகச் செலவினம் சென்ற ஆண்டு $4.8 பில்லியனைக் கடந்தது. சென்ற ஆண்டு 25 கடல்துறை நிறுவனங்கள் சிங்கப்பூரில் வர்த்தகத்தைத் தொடங்கின; அல்லது விரிவுபடுத்தின.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும் கப்பல்களின் மொத்த எடை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் 100 மில்லியன் டன்னுக்குமேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சீ கூறினார்.
சிங்கப்பூர் நீர்ப்பரப்பின்மேல் பறக்கும் ஆளில்லா வானூர்திகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் துறைமுகத்தைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமையையும் முக்கியக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மீதும் விநியோகச் சங்கிலிகள் மீதும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஆணையம் சொல்லிற்று.
விநியோகம் தொடர்ந்து தடைபட்டால், கப்பல்கள் திட்டமிட்டபடி வந்துசெல்வதற்கு ஆணையம் உதவும். சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் ஆபத்தான பகுதிகளில் செல்ல நேரிடுகையில் பாதுகாப்புத் திட்டம், ஆபத்துத் தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அது ஆலோசனை வழங்கியுள்ளது.
கடல்துறை மின்னிலக்க உருமாற்றப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்திய திரு சீ, வேலைகளை மறுவடிவமைத்து நாட்டின் கடல்துறை ஊழியரணியில் தொடர்ந்து முதலீடு செய்யும்படி தமது உரையில் கேட்டுக்கொண்டார்.