சிங்கப்பூரில் தற்போது மழைக்காலமாக உள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் கூடுதல் எலிகளைக் காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக எலி வளைகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது. இதனால் வேறு வழியின்றி வளைகளுக்குள் இருக்க முடியாமல் அவை வேறு இடம் தேடி வெளியே வருவதாக வெர்மினேட்டர் நிறுவனத்தின் தலைமைப் பூச்சியியல் நிபுணர் ரேச்சல் கீ தெரிவித்தார்.
இந்த மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளிலும் மற்ற கட்டடங்களிலும் எலிகளைப் பார்க்க முடிவதாக கில்லெம் பெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிக்கோல் ஸைசின்ஸ்கி சிங் கூறினார்.
அண்மையில் மழைக்காலம் காரணமாகப் பல எலிகளைப் பார்க்க முடிவதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சாக்கடை எலிகள் என்றும் அன்ட்டிசிமெக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப, பூச்சியியல் பிரிவின் தலைமை மேலாளர் திரு ஃபூ ஃபூங் குவான் தெரிவித்தார்.
வெளியே வரும் எலிகள் கட்டடங்களின் உட்கூரைகளிலும் வெற்று இடங்களிலும் ஒளிந்திருக்கும் என்றார் அவர்.
அண்மையில் கூடுதல் எலிகளைப் பார்க்க முடிவதாகப் பலர் தெரிவித்துள்ளனர். இதற்கு மழைக்காலம் ஒரு காரணம் என்றபோதிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று திருவாட்டி கீ கூறினார்.