சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டி, ஜனவரி 16ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மூலமாகச் சீனா செல்லவிருக்கிறது.
மிக முக்கியமானவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு மரியாதையோடு தனி விமானத்தில் அது தன் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது. அதைக் கவனித்துக்கொள்ள மூவர் அந்த போயிங் 747-400எஃப் ரக விமானத்தில் இருப்பர்.
மிக முக்கியமான பாண்டா எனப் பொருள்படும் வகையில் ‘லெ லெ’ பாண்டாவை ‘விஐபி’ என்று செல்லமாகக் குறிப்பிடுகிறது எஸ்ஐஏ நிறுவனம்.
‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டியை ஏற்றிச் செல்லும் விமானம், சாங்கி விமான நிலையத்தில் ஜனவரி 16ஆம் தேதி காலை 7.15 மணிக்குக் கிளம்பி நாலரை மணி நேரம் கழித்து சீனாவின் செங்டு ஷுவாங்லியூ அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடையும்.
பாண்டாக்களை வெளிநாடுகளுக்கு இரவல் தரும் சீனாவின் உடன்படிக்கையின்கீழ், அவை வெளிநாட்டில் குட்டியை ஈன்றால், அந்தக் குட்டிக்கு இரண்டு வயது நிரம்பியதும் அதைச் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டியை சிங்கப்பூர் சீனாவிடம் ஒப்படைக்கிறது. இதற்கு ஏற்பாடு செய்யும் வகையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் ‘லெ லெ’ தனிமைப்படுத்தப்பட்டது.
அதற்கு முழுமையான சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ‘லெ லெ’ நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று எஸ்ஐஏ கூறியது.
சீரான வெப்பநிலையில் உள்ள லாரி மூலம் ‘லெ லெ’ மண்டாயிலிருந்து சாங்கி விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.
தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட பயணக் கூடையில் அமர்ந்து அது விமானத்தில் பயணம் செய்யும். அந்தக் கூடையின் நீளம் 1.7 மீட்டர். அகலம்; 1.1 மீட்டர்; உயரம் 1.3 மீட்டர் என்று கூறப்பட்டது.
மண்டாய் வனவிலங்குக் குழுமத்தினர் ‘லெ லெ’க்கு அந்தக் கூடையைப் பழக்கப்படுத்தியுள்ளனர்.
மற்ற பயணிகளைப்போல் வரிசையில் காத்திருந்து குடிநுழைவுச் சோதனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ‘லெ லெ’க்கு இல்லை.
அதன் பயணக் கூடை, வைக்கோல் மெத்தையுடன் இணைக்கப்பட்டு பின்னர் அது விமானத்தின் முன்பகுதிக் கதவு வழியாக விமானத்தினுள் ஏற்றப்படும். பின்னர் விமானத்தின் கீழ்த்தளத்துடன் அந்தக் கூடை வலுவாகப் பிணைக்கப்படும்.
விமானத்திற்குள் வெப்பநிலை 12 டிகிரி செல்சியசுக்கும் 16 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். விமானத்திற்குள் மூங்கில், மூங்கில் குருத்து, ஆப்பிள், கேரட், வைக்கோல் எனப் பலவகை உணவுப்பொருள்களை ‘லெ லெ’ ருசிக்க முடியும்.
செங்டுவில் அதைப் பாதுகாப்பாகத் தரையிறக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக எஸ்ஐஏ கூறியது.