விலங்குத் துன்புறுத்தல், நலன் குறித்த சம்பவங்கள் சென்ற ஆண்டு 79 விழுக்காடு அதிகரித்தன.
இது, கடந்த 11 ஆண்டுகளில் காணப்படாத உயர்வு. புகார் கொடுக்கப்பட்ட சம்பவங்களுக்கு இந்தப் புள்ளி விவரம் பொருந்தும்.
சென்ற ஆண்டு மொத்தம் 915 விலங்குத் துன்புறுத்தல், நலன் சார்ந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக விலங்குத் துன்புறுத்தல் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) புதன்கிழமையன்று (ஜனவரி 31) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 511ஆகப் பதிவானது.
சென்ற ஆண்டு பதிவான புகார்களில் விலங்கு நலன் குறித்த சம்பவங்களின் எண்ணிக்கை 558. விலங்குகள் கவனிக்காமல் விடப்படுவது தொடர்பான சம்பவங்களும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.
அவற்றில் மூன்றில் இரண்டு சம்பவங்கள், விலங்குகள் வசிக்கும் இடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தது தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டது.
கைவிடப்பட்ட விலங்குகளின் தொடர்பில் எஸ்பிசிஏ சென்ற ஆண்டு 137 சம்பவங்களைக் கையாண்டது. அவற்றில் 285 விலங்குகள் சம்பந்தப்பட்டன.
2022ல் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பதிவான கைவிடப்பட்ட விலங்குகள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்.
முன்னதாக ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 70 விலங்குகள் கைவிடப்பட்டன.
சென்ற ஆண்டு கைவிடப்பட்ட விலங்குகளில் ஆக அதிகமானவை பூனைகளாகும். கைவிடப்பட்ட விலங்குகளில் 45 விழுக்காடு பூனைகள்.
அதற்கு அடுத்த நிலையில் வெள்ளெலிகள் (ஹாம்ஸ்டர்) ஆக அதிகமாகக் கைவிடப்பட்டன. அவற்றின் விகிதம் 27 விழுக்காடாகும்.