நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), செயற்கை நுண்ணறிவில் புதிய பட்டக்கல்வித் திட்டத்தை வழங்கவிருக்கிறது.
தகவல் மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறையில் மனிதவளத் தேவைகளை ஈடுகட்ட உதவும் வகையில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவது இதன் நோக்கம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூகம் எனும் பிரிவிலான இந்த நான்காண்டு அறிவியல் இளநிலைப் பட்டத்தில் முதல் தொகுதி மாணவர்கள் 2024 ஆகஸ்ட்டில் தங்கள் பட்டக்கல்வியைத் தொடங்குவர்.
உயர்தர செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கத் தேவையான கணித, கணினித் திறன்களை அவர்கள் பயில்வர்.
செயற்கை நுண்ணறிவின் நீதிநெறி சார்ந்த சிக்கல்களையும், சமநிலையின்மை, பாரபட்சம், தவறான தகவல் போன்றவை நீடிக்க அது எவ்வாறு காரணமாக விளங்கக்கூடும் என்பதையும் ஆராய அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
இந்த மாணவர்கள், என்டியுவின் கலை, வர்த்தகம், சமூக அறிவியல் போன்ற துறைகள் வழங்கும் சில பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பில் என்டியு வழங்கும் இரண்டாவது பட்டக்கல்வித் திட்டம் இது. முன்னதாக 2018 ஆகஸ்ட்டில் ‘டிஎஸ்ஏஐ’ எனப்படும் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு எனும் பிரிவில் பட்டக்கல்வியை அது தொடங்கியது.
புதிய பட்டக்கல்வியைப் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற்றபின், வங்கி, சுகாதாரப் பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் வேலை பார்க்க வாய்ப்பு கிட்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், ‘டுரிங் ஏஐ ஸ்காலர்ஸ்’ திட்டத்தின்கீழ், உலகின் போக்கை மாற்றக்கூடிய தீர்வுகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் கூறியது.
ஆகஸ்ட் 2024ல் முதற்படியாக 30 மாணவர்கள் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தலைசிறந்த பேராசிரியரின் வழிகாட்டுதலுடன்கூடிய ஆய்வுத் திட்டங்கள், அனைத்துலகக் கற்றல் அனுபவம், துறைசார்ந்த வேலையிடப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவுக் கல்வி மற்றும் ஆய்வில் முதற்கட்டமாக $4 மில்லியன் முதலீடு செய்யப்படும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹோ டெக் ஹுவா தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை 90லிருந்து 150க்கு உயர்த்தவிருப்பதாக அவர் கூறினார்.