ஊழியர்களுக்கு வேலையிடம் தொடர்பான காயங்கள் ஏற்படும்போது முதலாளிகள் மேலும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று மனிதவள அமைச்சு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாற்றங்கள் நடப்புக்கு வரும்போது நிறுவனங்கள் கிட்டத்தட்ட 19% கூடுதல் இழப்பீட்டுத் தொகை செலுத்த நேரிடும்.
தற்போது, வேலையிட மரணத்திற்கு முதலாளிகள் $225,000 செலுத்துகின்றனர். ஆனால், 2025 நவம்பரில் இது அதிகபட்சமாக $269,000க்கு உயரும்.
வேலை செய்யும் முழு ஆற்றலை நிரந்தரமாக இழக்கும் ஊழியருக்குத் தற்போது இழப்பீட்டுத் தொகையாக $289,000 வழங்கப்படுகிறது.
இது புது மாற்றத்தின்கீழ் $346,000ஆக உயரவுள்ளது.
பொதுச் சட்டத்தின்கீழ் சிவில் வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக இந்தச் சட்டத்தின்கீழ் வேலையிடம் தொடர்பான காயங்களுக்கும் நோய்களுக்கும் ஊழியர்கள் இழப்பீடு கோர இயலும்.
இழப்பீடு கோர, குறைந்த செலவில் விரைவான மாற்று வழியாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்து நடந்து இழப்பீட்டுத் தொகை கோர ஊழியர்களுக்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளது.
சம்பள உயர்வு, அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்கள் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இழப்பீட்டுத் தொகைக்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டில் பதிவான 46 வேலையிட மரணங்கள், 2023ல் 21.7% குறைந்து 36 எனப் பதிவாகின.
பாதுகாப்பு விதிமீறல்களுக்கான தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டதை அடுத்து எண்ணிக்கை குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதையடுத்து வேலையிட விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் கூடுதல் நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் காணவுள்ளன.
தலைமை நிர்வாகிகளுக்கான கட்டாயப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்பும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.