ஜாலான் புக்கிட் மேராவில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட காசநோய் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தம் 2,548 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாக பிப்ரவரி 8ஆம் தேதி அமைச்சு தெரிவித்தது.
பரிசோதனையில் 2,158 பேருக்குக் கிருமித்தொற்று இல்லை என்றும் 322 பேருக்கு அறிகுறி இல்லாத கிருமித் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
அறிகுறி இல்லாத கிருமித் தாக்கம் உள்ளவர்களுக்கு நோய் அறிகுறி இருக்காது என்பதுடன், அவர்களிடமிருந்து தொற்று பரவாது. பொதுச் சுகாதார ஆபத்து இல்லை.
இருவருக்கு மட்டுமே காச நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இருவரும் சிகிச்சையைத் தொடங்கியுள்ளதாகவும் இரு வார சிகிச்சை முடிந்தவுடன் அவர்களால் தொற்று பரவாது என்றும் அது குறிப்பிட்டது.
66 பேருக்கு மேலும் பரிசோதனை தேவைப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அறிகுறிகளைக் கண்காணிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜாலான் புக்கிட் மேரா புளோக் 1, புளோக் 3, ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை, உணவு மையம், புளோக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள தோங் கெங் முதியோர் நடவடிக்கை மையம் @ குவீன்ஸ்டவுன் ஆகியவற்றின் குடியிருப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கட்டாய காசநோய் பரிசோதனை ஜனவரி 11 அன்று தொடங்கியது.
கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்ட பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இடம்பெற்றது.
புளோக்குகள் 1, 2, ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை, உணவு மையத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு தன்னார்வ பரிசோதனை வழங்கப்பட்டது.
காசநோயின் தாக்கத்தைக் கண்டறிய ஜனவரி 11 முதல் ஜனவரி 15 வரை ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ரத்தப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களை மதிப்பிடுவதற்காக ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை எக்ஸ்-ரே பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், 18.4 விழுக்காட்டினருக்கு ரத்தப் பரிசோதனையில் கிருமித் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இது அறிகுறியில்லாத தொற்று அல்லது நோய்த் தாக்கத்தைக் குறிக்கலாம்.
கட்டாயப் பரிசோதனைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 1,748 பேரில் 1,701 பேர் பரிசோதனைக்கு முன்வந்துள்ளனர்.
ஏனையவர்களையும் தொடர்ந்து ஈடுபடுத்தி, காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் (டிபிசியு) பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரத்தப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது எக்ஸ்-ரே அசாதாரணமாக இருந்தவர்களுக்கு மருந்தகத்தில் சோதனை செய்துகொள்ள தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
காசநோய் இருப்பவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்படும். அறிகுறியில்லாத காசநோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.