சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிப்ரவரி 10ஆம் தேதி கடல் நீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:15 மணிவாக்கில் படகு முனையத்தின் கடற்கரையில் ஆடவர் ஒருவர் காணவில்லை என்று காவல் துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அதன் பின்னர் அங்கு வந்த மீட்புப்படையினர் 24 மணி நேரத்திற்கு மேல் நடந்த தேடுதலுக்குப் பிறகு ஆடவரின் சடலத்தை மீட்டனர்.
ஆடவரைத் தேட சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் சுற்றுக்காவல் படகும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் கப்பலும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவரின் மரணத்தில் எந்தவித சூதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. மீட்பு பணிகள் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
51 லோரோங் பேக்குகாங்கில் உள்ளது சாங்கி பாயிண்ட் படகு முனையம். அங்கிருந்துதான் புலாவ் உபின் தீவுக்கு படகுகள் செல்லும்.