சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ள இடங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு மடங்கானது.
மேலும், வாராந்தர டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. பிப்ரவரி 10ஆம் தேதி முடியும் வாரத்தில் 515 டெங்கி சம்பவங்கள் பதிவாயின. அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான வாராந்தர எண்ணிக்கையில் இரு மடங்குக்கும் அதிகமாகும்.
பிப்ரவரி 14ஆம் தேதி நிலவரப்படி இவ்வாண்டு 2,600க்கும் அதிகமான டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வியாழக்கிழமையன்று (15 பிப்ரவரி) தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த விவரங்களை வெளியிட்டது.
ஜனவரி மாதம் மட்டும் 2,025 பேர் டெங்கி நோய்க்கு ஆளாகினர். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 1,016ஆகப் பதிவானது.
வீடுகளில் பொதுவாக வாளிகள், மலர்த் தொட்டித் தட்டுகள், பூஞ்சாடிகள் உள்ளிட்டவை கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இடங்கள் எனச் சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது. கட்டுமானத் தளங்களில் நீர் தேங்கும் பகுதிகள் போன்றவற்றிலும் கொசு இனப்பெருக்கம் இடம்பெறுவதாக வாரியம் தெரிவித்தது.
டெங்கி சம்பவங்கள் அதிகம் உள்ள பகுதிகள் என்று சுற்றுப்புற வாரியம் அடையாளம் கண்டவற்றில் பூன் லேயில் உள்ள குடியிருப்பு வட்டாரமும் ஒன்றாகும். சென்ற மாதம் அங்கு 174 இடங்களில் கொசு இனப்பெருக்கம் இடம்பெற்றது தெரிய வந்தது. அவற்றில் 101 இடங்கள் வீடுகளில் காணப்பட்டன.
பூன் லேயில் சம்பந்தப்பட்ட பகுதி அடையாளம் காணப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் அங்கு கொசு இனப்பெருக்கம் இடம்பெற்றதை தேசிய சுற்றுப்புற வாரியம் அறிந்தது.
பூன் லேயைப் போல் பாசிர் ரிஸ்சிலும் டெங்கி சம்பவங்கள் அதிகம் இருக்கும் பகுதியாக குடியிருப்பு வட்டாரம் ஒன்று அடையாளம் காணப்பட்டது. அங்கு 90 இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவற்றில் 62 இடங்கள் வீடுகளில் காணப்பட்டன.
பூன் லே, பாசிர் ரிஸ் ஆகிய இரண்டிலும் உள்ள அப்பகுதிகள் டெங்கி சம்பவங்கள் அதிகம் இருப்பவையாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வகைப்படுத்தப்பட்டன. அவை இன்னமும் அதே நிலைப்பாட்டுடன் இருக்கின்றன.
ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க அனைவரும் பங்காற்றவேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.