மார்சிலிங் சாலையில் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இரண்டு வீடுகளில் தீ மூண்டன.
புளோக் 4ன் பத்தாவது மாடி வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து அதிகாலை 2.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு தீயணைப்புப்படையினர் விரைந்தபோது வீட்டிற்குள் ஒரே புகையாக இருந்தது.
வீட்டின் வரவேற்பு அறையில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர்.
கழிவறையில் 72 வயது முதியவர் சுயநினைவின்றிக் கிடந்தார்.
அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.
அதே நாள் பிற்பகல் 1 மணி அளவில் மார்சிலிங் சாலை புளோக் 3ன் ஒன்பதாவது மாடி வீட்டில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தைத் தீயணைப்புப்படையினர் அடைவதற்கு முன்பு தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவம் காரணமாக மாண்ட குடியிருப்பாளரின் குடும்பத்தினருக்கு மார்சிலிங்-யூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஸாக்கி முகம்மது தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
தீச்சம்பவத்தில் இன்னொருவர் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் உயிர் தப்பியதாகவும் திரு ஸாக்கி கூறினார்.