சிங்கப்பூரில் 2,600க்கும் அதிகமான நிறுவனங்கள் தன்னுரிமை பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வருவதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
அத்தகைய வழிமுறைகள் 2018ஆம் அண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.
அரசாங்க, ஊழியரணி, முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றை அடக்கும் முத்தரப்புக் குழு அந்த வழிமுறைகளை வரைந்தது. நியாயமான முறையில் தன்னுரிமை பணியாளர்களை வேலைக்கு எடுக்க வகைசெய்யும் அந்த வழிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றச் செய்வது இலக்கு.
2018ஆம் ஆண்டு 470 நிறுவனங்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றின. 2020ல் அந்த எண்ணிக்கை 1,800ஆக அதிகரித்தது.
சென்ற ஆண்டு எண்ணிக்கை மேலும் கூடி 2,600ஆகப் பதிவானது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் வூ மெங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் கோ பதிலளித்தார்.
வழிமுறைகளைப் பின்பற்றிய நிறுவனங்கள் அவற்றைச் சரிவர செயல்படுத்துவது போன்றவற்றைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் சி ஜின்லி கேட்டார். அதற்கும் பதிலளித்த டாக்டர் கோ, தன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வேலை பல்வேறு அம்சங்களைக் கொண்டது என்றும் தன்னுரிமை பணியாளர் ஒவ்வொருவருக்கும் வரையப்படும் ஒப்பந்தம் மாறுபட்டது என்றும் சுட்டினார்.